Published : 10 Jul 2019 12:07 PM
Last Updated : 10 Jul 2019 12:07 PM

தமிழகத்தில் அதிகமான உணவு கலப்படம்: நாடாளுமன்றத்தில் தகவல்

நாட்டில் அதிகமான உணவு கலப்படம் நடைபெறும் மாநிலங்களில் தமிழகம் இடம் பெற்றுள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

உணவு கலப்படம் மற்றும் அதனை தடுக்க மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை தொடர்பான கேள்விக்கு மக்களவையில் மத்திய உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் பதிலளித்ததாவது:

இந்தியாவில் 2018-19ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 3ல் ஒரு பங்கு உணவு கலப்படம் செய்யப்பட்டவை என்பது தெரிய வந்துள்ளது. நாடுமுழுவதும் 99,000 உணவு மாதிரிகள் சோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அவற்றில் 24,000 மாதிரிகளில் கலப்படம் இருப்பது உறுதியாகியுள்ளது.மாநில அரசுகளிடம் இருந்து பெறப்பட்ட தகவல்கள் இதனை உறுதி செய்கின்றன.

இந்தியா முழுவதும் உணவு பொருட்களின் தரம் குறித்து இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் மூலம் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, , கடந்த 2017-18- ம் ஆண்டில் அதிகம் உணவு கலப்படம் செய்யப்படும் மாநிலங்களாக உத்தப்பிரதேசம், பஞ்சாப், தமிழ்நாடு, மகாராஷ்டிரா உள்ளிட்டவை இடம் பெற்றிருந்தன.

2018-19-ம் ஆண்டில் உத்தரப்பிரதேசம், தமிழ்நாடு, பஞ்சாப், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்கள் உணவு கலப்படத்தில் முதலிடத்தில் உள்ளன. தமிழகத்தில் 5,730 உணவு கலப்பட சோதனைகள் நடைபெற்று அவற்றில் 2,601 உணவு மாதிரிகளில் கலப்படம் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

உணவு கலப்படத்தை டுக்கும் வகையில் மத்திய அரசு நுகர்வோர் பாதுகாப்பு மசோதா கொண்டு வந்துள்ளது.

இவ்வாறு ராம்விலாஸ பாஸ்வான் கூறினார்

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x