Published : 10 Jul 2019 04:08 PM
Last Updated : 10 Jul 2019 04:08 PM

ஹைட்ராலிக் கதவு தானாக மூடியதில் சிக்கி ஸ்பைஸ் ஜெட் ஊழியர் பலி: கொல்கத்தாவில் பரிதாபம்

கொல்கத்தா விமான நிலையத்தில் ஹைட்ராலிக் கதவு தானாக மூடிக்கொண்டதில் ஸ்பைஸ்ஜெட் தொழில்நுட்ப பணியாளர் ரோஹித் பாண்டே என்பவர் பலியானார். இந்த விபத்து குறித்து ஸ்பைஸ் ஜெட் விமான நிர்வாகம் வருத்தம் தெரிவித்துள்ளது.

 

"தொழில்நுட்ப வல்லுநர் க்யூ 400 விமானத்தின் தரையிறங்கும் கியரில் பராமரிப்பை மேற்கொண்டபோது, தரையிறங்கும் கதவு தற்செயலாக மூடப்பட்டு அவர் அங்கே மாட்டிக்கொண்டு உயிரிழந்தார், இதனால் நாங்கள் மிகவும் சோகத்தில் ஆழ்ந்துள்ளோம்” என்று ஸ்பைஸ் ஜெட் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

 

விமானத்தின் அடிப் பகுதிக்குச் சென்று அவர் சோதனை மேற்கொண்ட போது, ஹைட்ராலிக் எனப்படும் விசை இயக்க அமைப்பு மூடிக் கொண்டது. இதில், தொழில்நுட்ப வல்லுநரின் கழுத்து சிக்கிக் கொள்ளவே, சில விநாடிகளில் உயிரிழந்தார். ஹைட்ராலிக் கதவு உடைக்கப்பட்டு அவரது உடல் விடுவிக்கப்பட்டதாக மீட்புக் குழுவினர் கூறியுள்ளனர்.

 

விமான நிலைய காவல் நிலையத்தில் "இயற்கைக்கு மாறான மரணம்" குறித்து புகார் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

 

இது தொடர்பாக தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு விமான பராமரிப்பு பொறியாளர் கூறும்போது,  “என்னுடைய 26 ஆண்டுகால சேவையில் இப்படிப்பட்ட விபத்து மரணத்தை நான் கேள்விப்பட்டதில்லை. விசாரணைக்குப் பிறகுதான் உண்மை தெரியவரும். அவர் முறையான நடைமுறையைக் கடைபிடித்தாரா அல்லது விமானத்தை விரைவில் அனுப்ப மூத்த அதிகாரியினால் தவறாக வழிநடத்தப்பட்டு செயல்பட்டாரா என்பது தெரியவில்லை. தனியார் துறையில் பணி அழுத்தங்கள் அதிகம்.” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x