Published : 12 Jul 2019 11:19 AM
Last Updated : 12 Jul 2019 11:19 AM
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி விலகி 7 வாரங்கள் கடந்து விட்டன, காரியக் கமிட்டி உடனடியாக கூடி அடுத்த தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என அக்கட்சியின் மூத்த தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா வலியுறுத்தியுள்ளார்.
மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 52 இடங்களில் மட்டும் வென்றது. கடந்த 2014-ம் ஆண்டைப் போல் இந்த முறையும் எதிர்க்கட்சி அந்தஸ்து பெற முடியாமல் போனது. கடந்த 2014-ம் ஆண்டில் 44 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் கட்சி வென்றது.
மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு நேர்ந்த தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல் காந்தி கடந்த மாதம் 25-ம் தேதி நடந்த கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
இதை செயற்குழு உறுப்பினர்கள் ஏற்கவில்லை. ஆனால், ராகுல் காந்தி தொடர்ந்து தனது முடிவை தளர்த்திக்கொள்ளாமல் இருந்து வருகிறார். காரியக் கமிட்டி கூடி அடுத்த தலைவரை தேர்தெடுக்கும் எனத் தெரிகிறது.
ராகுல் காந்தியின் முடிவை ஆதரித்து காங்கிரஸ் நிர்வாகிகள் பலரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்து வருகின்றனர். மும்பை காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து மிலிந்த் தியோரா விலகினார்.
காங்கிரஸ் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து ஜோதிராதித்ய சிந்தியாவும் ராஜினாமா செய்துள்ளார்.
இந்தநிலையில் மத்திய பிரதேச மாநிலம் போபால் வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ராகுல் காந்தி பதவி விலகுவார் என நாங்கள் இதுவைர எண்ணவில்லை. அவர் பதவியில் தொடர வைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம். ஆனால் அவர் தனது முடிவில் உறுதியாக உள்ளார்.
எனவே கட்சிகஅகு புதிய தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும். ஏற்கெனவே 7 வாரகாலம் கடந்து விட்டன. இனியும் தாமதிக்காமல் விரைவாக முடிவு எடுக்க வேண்டும். காரியக் கமிட்டி உடனடியாக கூடி அடுத்த தலைவரை தேர்வு செய்ய வேண்டும்” என்று கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT