Published : 08 Jul 2019 09:53 AM
Last Updated : 08 Jul 2019 09:53 AM
டெல்லி அருகே ஆக்ரா-யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் பாலத்தில் இருந்து இன்று அதிகாலை பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 29 பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஏராளமானோர் காயமடைந்தனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து டெல்லிக்கு மாநில அரசுப்பேருந்து சென்றது. இந்த பேருந்து இரு அடுக்கு படுக்கை வசதி கொண்ட சொகுசு பேருந்து. இந்த பேருந்தில் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர்.
ஆக்ரா மாவட்டம், ஆக்ரா-யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் உள்ள எட்மாத்பூர் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட ஜார்னா நல்லா பகுதியில் இன்று காலை 4.15 மணிக்கு பேருந்து வந்தது. அப்போது, பேருந்து திடீரென சாலைத் தடுப்பில் மோதி, இரு பாலத்துக்கும் இடையே இருக்கும் இடைவெளிக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
பாலத்துக்கு கீழே செல்லும் ஆற்றில் தண்ணீர் குறைவாக சென்றத பேருந்து விபத்துக்குள்ளான சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்த மக்கள் ஓடிவந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர். போலீஸாருக்கும், மீட்புப்படையினருக்கும், மருத்துமனைக்கும் தகவல் அளித்தனர்.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 29 பயணிகள் பலியானார்கள். மேலும் படுகாயத்துடன் இடிபாடுகளில் சிக்கி இருந்த 20க்கும் மேற்பட்ட பயணிகள போலீஸார் மீட்டு அவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆக்ரா மாவட்ட போலீஸ் எஸ்.பி. பப்லூ குமார் கூறுகையில், " ஆக்ரா-யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே 29 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த 20-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். போலீஸார், தீயணைப்பு படையினர் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் " எனத் தெரிவித்தார்.
போலீஸார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் பேருந்தின் ஓட்டுநர், அதிகாலை நேரத்தில் தூங்கியதால், பேருந்துநிலைதடுமாறி, சாலைத் தடுப்பில் மோதி பாலத்தில் இருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாகத் தெரிவித்தனர்.
இந்த விபத்து குறித்து அறிந்ததும் உ.பி. மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT