Last Updated : 04 Jul, 2019 12:03 PM

 

Published : 04 Jul 2019 12:03 PM
Last Updated : 04 Jul 2019 12:03 PM

ஆர்எஸ்எஸ் மீது அவதூறு: மும்பை நீதிமன்றத்தில் ராகுல் காந்தி நேரில் ஆஜர்

ஆர்எஸ்எஸ் அமைப்பை ராகுல் அவதூறாகப் பேசியதாகக் கூறி ஆர்எஸ்எஸ் தொண்டர் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் மும்பை நீதிமன்றத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று நேரில் ஆஜராகினார்.

கடந்த 2017-ம் ஆண்டு பெங்களூருவில் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்தக் கொலை குறித்து கருத்து தெரிவித்த ராகுல் காந்தி, "பாஜக, ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்களுக்கு எதிராக யாரேனும் பேசினால் தாக்கப்படுவீர்கள், அழுத்தப்படுவீர்கள், கொல்லப்படுவீர்கள்" எனத் தெரிவித்தார். இதே கருத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியும் தெரிவித்திருந்தார்.

இந்தக் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த தொண்டர் துர்திமான் ஜோஷி மும்பை பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி, சோனியா காந்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சீதாராம் யெச்சூரி ஆகியோர் மீது வழக்கு தொடர்ந்தார்.

அதில், ''கவுரி லங்கேஷ் கொல்லப்பட்ட 24 மணிநேரத்துக்குள் ஆர்எஸ்எஸ் அமைப்பு, பாஜக மீது ராகுல் காந்தி, சீதாராம் யெச்சூரி அவதூறு பரப்புகிறார்கள்" எனத் தெரிவித்திருந்தார்.

ஆனால், மனுவில் இருந்து சோனியா காந்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பெயரை நீதிமன்றம் நீக்கிவிட்டு, சீதாராம் யெச்சூரி, ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பி நேரில் ஆஜராக உத்தரவிட்டது

இந்நிலையில் ராகுல் காந்தி டெல்லியில் விமானம் மூலம் இன்று காலை இந்த வழக்கில் ஆஜராக மும்பை வந்தார். அங்கிருந்து தனி வாகனம் மூலம் மும்பை பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் முன்பு ஆஜராகினார். அப்போது நீதிபதியிடம் ராகுல் மீது எந்தவிதமான குற்றமும் இல்லை என்று கோரப்பட்டது. இதையடுத்து ரூ.15 ஆயிரம் பிணை அடிப்படையில் ராகுல் காந்தியை விடுவித்தார். இப்பணத்தை முன்னாள் எம்.பி. ஏக்நாத் கெய்க்வாட் செலுத்தினார்.

ராகுல் காந்தியுடன் மும்பை காங்கிரஸ் கட்சியின் தலைவர் மிலிந்த் தியோரா, உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடன் வந்திருந்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியும் நீதிமன்றத்தில் ஆஜராகினார்.

இதற்கிடையே ராகுல் காந்தி மீது மற்றொரு ஆர்எஸ்எஸ் தொண்டர் ஒருவர் அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார். கடந்த 2014-ம் ஆண்டில் தானே நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மீது தொடர்ந்த வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கிறது.

மகாத்மா காந்தியைக் கொலை செய்ததற்கும், ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் தொடர்பு இருப்பதாக ராகுல் காந்தி பேசியதற்காக அந்த வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x