Last Updated : 01 Jul, 2019 07:43 PM

 

Published : 01 Jul 2019 07:43 PM
Last Updated : 01 Jul 2019 07:43 PM

தமிழகத்தின் தண்ணீர் பிரச்சினையைத் தீர்க்க மத்திய அரசு தலையிட வேண்டும்: மக்களவையில் மாணிக்கம் தாகூர் கோரிக்கை

தமிழகத்தின் தண்ணீர் பிரச்சினையைத் தீர்க்க மத்திய அரசு தலையிட வேண்டும் என மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கோரினார்.

இது குறித்து விருதுநகர் தொகுதி எம்.பி.யான மாணிக்கம் தாகூர் இன்று மக்களவையின் பூஜ்ஜியம் நேரத்தில் பேசியதாவது:

''தமிழகத்தில் தண்ணீர் பிரச்சினை மிகக் கடுமையாக இருக்கிறது. தமிழகமே தத்தளிக்கிறது. தமிழகத்தில் குறிப்பாக மதுரை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் கடும் தண்ணீர் பற்றாக்குறையால் மக்கள் அவதிப்படுகின்றனர். ஆனால், மாநில அரசு எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் கண்டும் காணாததுபோல் இருக்கிறது. கடந்த எட்டு ஆண்டு காலமாக தமிழகத்தில் உள்ள மாநில அரசு குடிதண்ணீர் வசதிக்கான திட்டங்கள் எதையும் செய்யவில்லை.

அதற்குப் பதிலாக ஆற்றில் மணல் அள்ளும் தனியாரை ஊக்குவித்து அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேலும் உயர்த்துவதில் மாநில அரசினர் அதிக கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். அதனால் தமிழகத்தில் தண்ணீர் வசதியை வழங்குவதற்கான நிர்வாகத்தில் தமிழக அரசு முழுமையான தோல்வியைக் கண்டு இருக்கிறது. மத்திய அரசு உடனடியாக இதில் தலையிட வேண்டும்.

மத்திய நிபுணர் குழுவைத் தமிழகத்திற்கு அனுப்பி தமிழகத்தில் உள்ள தண்ணீர் பிரச்சினையை முழுமையாக ஆய்வு செய்து அவற்றைத் தீர்ப்பதற்கான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்.

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு கிராமமும் தண்ணீர் இல்லாமல் தவிப்புடன் இருப்பதை தினந்தோறும் கவனிக்க முடிகிறது. ஆகவே மத்திய அரசு உடனடியாக இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்''.

இவ்வாறு மாணிக்கம் தாகூர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x