Last Updated : 30 Jun, 2019 12:00 AM

 

Published : 30 Jun 2019 12:00 AM
Last Updated : 30 Jun 2019 12:00 AM

தமிழகம் அணைகள் கட்டினால் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டோம்: கர்நாடக அமைச்சர் உறுதி

காவிரியின் குறுக்கே தமிழக அரசு எத்தனை அணைகளை கட்டினாலும் எதிர்ப்பு தெரிவிக்கமாட்டோம் என கர்நாடக நீர்வளத் துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பெங்களூருவில் நேற்று அவர் கூறியதாவது:

கர்நாடகாவில் மழை பெய்யாமல் அணைகள் வறண்டு கிடக்கும்போது தமிழகத்துக்கு நீரை திறக்க இயலாது. காவிரியின் குறுக்கேயுள்ள 4 அணைகளின் நீர் இருப்பை பொறுத்து, நீரை திறக்குமாறு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டு இருப்பது ஆறுதலாக உள்ளது.

கர்நாடக விவசாயிகள் பாசனத்துக்கு நீரை திறக்கக்கோரி போராடி வருகின்றனர். அவர்களின் போராட்டத்தை நாங்கள் மதிக்கிறோம். முன்பு அணைகளில் நீர் திறக்கும் அதிகாரம் கர்நாடகாவுக்கு இருந்தது. இப்போது அணையை திறக்கும் அதிகாரம் காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு மட்டுமே உள்ளது. அவர்களின் உத்தரவு இல்லாமல் பாசனத்திற்காக நீரை திறக்க முடியாது. எனவே விவசாயிகள் கர்நாடக அரசின் நிலையை புரிந்து கொள்ள வேண்டும்.

கர்நாடக அரசின் மேகேதாட்டுவில் அணைகட்டும் முடிவை தமிழகம் சரியாக புரிந்து கொள்ளவில்லை. அரசியல் நோக்கத்துக்காக எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். கர்நாடக அரசின் நியாயமான உரிமையை தமிழக அரசும், கட்சிகளும் புரிந்து கொள்ள வேண்டும். தமிழக அரசு ராசிமணல் என்னும் இடத்தில் அணை கட்ட திட்டமிட்டு வருவதாக ஊடகங்கள் மூலமாக அறிந்தேன்.

காவிரியின் குறுக்கே தமிழக எல்லையில் பிலிகுண்டுலுவில் தொடங்கி வங்காள விரிகுடா வரை எங்கு வேண்டுமானாலும் தமிழக அரசு அணை கட்டிக்கொள்ளட்டும். எத்தனை அணைகளை கட்டினாலும் கர்நாடக அரசு எதிர்ப்பு தெரிவிக்காது. அதே நேரம் இரு மாநில விவசாயிகள் நலனுக்காகவும், பெங்களூரு மாநகரின் குடிநீர் மற்றும் மின்சார‌ தேவைக்காகவும் கர்நாடகா மேகேதாட்டுவில் அணை கட்ட தமிழகம் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் தமிழகத்துக்கு அதிக நன்மைகள் கிடைக்கும். மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன் மேகேதாட்டுவில் அணை கட்டும் பணிகள் தொடங்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x