Last Updated : 29 Jun, 2019 12:35 PM

 

Published : 29 Jun 2019 12:35 PM
Last Updated : 29 Jun 2019 12:35 PM

விடுமுறைக்குப்பின் உச்ச நீதிமன்ற பணிகள் ஜூலையில் தொடக்கம்: ரஃபேல், அயோத்தி, ராகுல் வழக்குகளில் முடிவு தெரியும்

6 வாரங்கள் கோடை விடுமுறைக்குப்பின் உச்ச நீதிமன்றத்தின் வழக்கமான பணிகள் அடுத்தவாரம் தொடங்குகின்றன.

 மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் அயோத்தி நில விவகார வழக்கு, ரஃபேல் மறுஆய்வு வழக்கு, ராகுல் காந்தி மீது அவமதிப்பு வழக்கு ஆகியவை விசாரிக்கப்பட உள்ளது.

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையில் 31 நீதிபதிகள் உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றி வருகின்றனர். ஜூலை மாதத்தில் ரஃபேல் மறுஆய்வு மனு வழக்கில் தீர்ப்பு அளிக்கப்படும் எனத் தெரிகிறது.

ரஃபேல் போர்விமானக் கொள்முதலில் எந்தவிதமான விசாரணையும் தேவையில்லை என்று உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு டிசம்பர் 14-ம் தேதி தீர்ப்பளித்திருந்தது. அந்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி வழக்கறிஞர்கள் பிரசாந்த் பூஷன், யஷ்வந்த் சின்ஹா,அருண் ஷோரி ஆகியோர் சீராய்வு மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கின் விசாரணை முடிந்துள்ள நிலையில் தீர்ப்பு வழங்கப்படலாம் எனத் தெரிகிறது.

மேலும், உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை தவறாகக் கூறி, காவலாளி திருடன் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறினார். இதை எதிர்த்து பாஜக எம்.பி. மீனாட்சி லெகி தொடர்ந்து ராகுல்மீதான அவமதிப்பு வழக்கின் விசாரணையும் முடிந்துள்ள நிலையில் அந்த வழக்கிலும் வரும் வாரங்களில் தீர்ப்பளிக்கப்படலாம்.

இந்த வழக்கில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி, வழக்கை முடித்து வைக்க ராகுல் காந்தி தரப்பில் கோரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், அயோத்தியில் ராமஜென்ம பூமி, பாபர் மசூதி  நில விவகார வழக்கில் சுமூக தீர்வுகாணவும், பேச்சு நடத்தவும் உச்ச நீதிமன்ற நீதிபதி எம். கலிபுல்லா தலைமையில் குழுஅமைக்கப்பட்டது. இந்த குழுவில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்பிரசாத், வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இந்த குழு அறிக்கை அளிக்க ஆகஸ்ட் 15-ம் தேதிவரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கும் விசாரிக்கப்பட உள்ளது.

என்ஜிஓ மூலம் வெளிநாடுகளில் இருந்து நன்கொடை வசூலிப்பதாகக் கூறி மூத்த வழக்கறிஞர்கள் இந்திரா ஜெய்சிங், ஆனந்த் குரோவர் மீது முதல்தகவல் அறிக்கை பதிவு செய்து, விசாராணை நடத்தக்கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரிக்கப்பட உள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்புஅந்தஸ்து வழக்குவதை எதிர்த்து பாஜக தலைவர் அஸ்வினி உபாத்யாயா தொடர்ந்த வழக்கும் உச்ச நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x