Last Updated : 30 Jun, 2019 10:28 AM

 

Published : 30 Jun 2019 10:28 AM
Last Updated : 30 Jun 2019 10:28 AM

புதிய காங்கிரஸ் தலைவர் நியமனம்: பதவியை விட்டு செல்வதால் கண்ணீர்விட்ட சத்தீஸ்கர் மாநில முதல்வர்

சத்தீஸ்கர் மாநிலத்துக்கு புதிய காங்கிரஸ் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்த பதவியில் இருந்துசெல்வதை நினைத்து, மாநில முதல்வர் பூபேஷ் பாஹல் தொண்டர்கள் மத்தியில் கண்ணீர் விட்டு அழுதார்

சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடக்கிறது. அங்கு முதல்வராக பூபேஷ் பாஹல் இருக்கிறார். மாநில முதல்வராகவும், மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் இருந்து வருகிறார்.

கடந்த 2013ம் ஆண்டு மாநில காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்ட பூபேஷ் பாஹல், தொடர்ந்து 6 ஆண்டுகள் தலைவராக செயல்பட்டார். கடந்த ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. பூபேஷ்  பாஹல் முதல்வராகப் பதவி ஏற்றார். முதல்வராகிய பின்பும், மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் தொடர்ந்து இருந்து வந்தார்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த 15 ஆண்டுகளாக பாஜகவின் ராமன் சிங் முதல்வராக இருந்த நிலையில், அவரின் ஆட்சியை காங்கிரஸ் அகற்றியது சாதனையாகப் பார்க்கப்பட்டாலும், மக்களவைத் தேர்தலில் 2 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் வென்றது.  

தேர்தல் தோல்விக்கு  பொறுப்பேற்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பதவி விலகியதால், அதே முடிவை பின்தொடர்ந்து பூபேஷ் பாஹலும் தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்து ராகுல் காந்தியிடம் கடிதம் அளித்தார். அடுத்த தலைவர் நியமிக்கும் வரை தலைவராக தொடரும்படி காங்கிரஸ் தலைமை கேட்டுக்கொண்டது.

இந்த சூழலில் மாநில காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவராக மூத்த தலைவர் மோகன் மர்க்கத்தை கட்சித்  தலைமையிடம் கடந்த இரு நாட்களுக்கு முன் நியமித்தது. இதைத் தொடர்ந்து நேற்று ராய்ப்பூரில் காங்கிரஸ் தலைவர் பூபேஷ் பாஹலுக்கு பிரிவு உபச்சார விழா நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் புதிய தலைவர் மோகன் மர்க்கம், மூத்த தலைவர் பூனியா ஆகியோர் பங்கேற்றனர். தொண்டர்கள் ஏராளமானோரும் கூடி இருந்தனர்.

அப்போது, முதல்வர் பூபேஷ் பாஹல் தொண்டர்கள் மத்தியில் பேசுகையில், " கடந்த 2013-ம் ஆண்டு மாநிலத்தின் காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தியால் நியமிக்கப்பட்டேன். கடந்த 2013ம் ஆண்டில் தேர்தலில் தோல்வி அடைந்தோம். 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலும் கடுமையாக உழைத்தோம், ஆனால், ஆட்சிக்கு வர முடியவில்லை. ஆனால், நம்முடைய தொண்டர்கள், தலைவர்களின் தொடர் முயற்சியால் சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சி அமைத்துள்ளது. 6 ஆண்டுகளாக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்துவிட்டு செல்வது வருத்தமாக இருக்கிறது" எனக் கூறிக்கொண்டு கண்ணீர்விட்டு அழுதார். இதைப் பார்த்த தொண்டர்கள், முதல்வரை வாழ்த்தியும், காங்கிரஸ் கட்சியை வாழ்த்தியும் கோஷமிட்டனர்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x