Last Updated : 30 Jun, 2019 08:46 PM

 

Published : 30 Jun 2019 08:46 PM
Last Updated : 30 Jun 2019 08:46 PM

ஊடக சுதந்திரத்தை நசுக்குகிறது பாஜக அரசு: காங்கிரஸ் கட்சி கண்டனம்

சில நாளேடுகளுக்கு விளம்பரங்களை தாரமல் நிறுத்திவைத்து, ஊடக சுதந்திரத்தை நசுக்குகிறது மத்தியில் ஆளும் பாஜக அரசு என்று காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

மக்களவைத் தேர்தலின்போது சில நாளேடுகள் மத்தியில் ஆளும் பாஜக அரசின் கொள்கைகளையும், செயல்பாடுகளையும் கடுமையாக விமர்சனம் செய்து செய்திகள் வெளியிட்டன. இதனால், 2-வது முறையாக பாஜக ஆட்சிக்கு வந்ததும், அந்த குறிப்பிட்ட சில நாடுகளுக்கு அரசின் விளம்பரத்தை வழங்காமல் நிறுத்திவைத்துள்ளதாக செய்திகள் வெளியாகின.

இந்த செய்தியைக் குறிப்பிட்டு காங்கிரஸ் கட்சியின் தலைமைச் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், " ரஃபேல் போர் விமான ஊழலை வெளிக்கொண்டு வந்த நாளேடுகள், குடியுரிமை மசோதாவை விமர்சித்த நாளேடுகள், பிரதமர் மோடி தேர்தல் விதிமுறைகள் மீறல்கள் செய்ததை செய்தியாக வெளியிட்ட நாளேடுகள் ஆகியவற்றுக்கு மத்தியில் ஆளும் பாஜக அரசு, அரசின் விளம்பரங்களை வழங்காமல் நிறுத்திவைத்துள்ளதாக செய்திகளில் அறிந்தேன்.

மத்தியில் ஆளும் பாஜக அரசு ஊடகங்களின் சுதந்திரத்தை நசுக்குகிறது, விளம்பரங்களை வழங்காமல் 4 நாளேடுகளுக்கு நிறுத்திவைப்பது வெளிப்படையாக பழிவாங்கும் நடிவடிக்கையாகும். இதுதான் மோடி.2.0 " எனத் தெரிவித்துள்ளார்.

மற்றொரு ட்விட்டில் சுர்ஜேவாலா கூறுகையில் " விளம்பர வருமானம், கார்ப்பரேட் நிறுவனங்கள், சந்தைப்பிரிவு ஆகியவற்றின் மூலம் நாளேட்டின் செய்திப்பிரிவை மத்திய அரசின் தனது  கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதாகும், சுதந்திரம், எதிர்ப்புதான் முதலில் கொல்லப்படுகிறது " எனத் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கியமுற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்தபோதும், இதேபோன்ற மத்திய அரசை விமர்சித்த நாளேடுகளுக்கு சிறிதுகாலம் விளம்பரங்களை வழங்காமல் நிறுத்திவைக்கப்பட்டது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x