Published : 31 Aug 2017 09:17 AM
Last Updated : 31 Aug 2017 09:17 AM
கர்நாடக அமைச்சர் டி.கே.சிவகுமாருடன் தொடர்புடைய தொழிலதிபர்கள் 10 பேரின் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
அண்மையில் முடிந்த மாநிலங்களவைத் தேர்தலில் குஜராத் காங்கிரஸ் எம்எல்ஏக்களிடம் பாஜக மேலிடம் குதிரை பேரம் நடத்துவதாக புகார் எழுந்தது. இதையடுத்து 44 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பெங்களூருவுக்கு வரவழைக்கப்பட்டு, கர்நாடக மின்சாரத்துறை அமைச்சர் டி.கே.சிவகுமார் பொறுப்பில் சொகுசு விடுதியில் தங்கவைக்கப்பட்டனர். இந்நிலையில், கடந்த 2-ம் தேதி டி.கே.சிவகுமாரின் வீடு, எம்எல்ஏக்கள் தங்கியிருந்த விடுதி உட்பட 70-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது.
இந்த சோதனையில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கின. ரூ.15 கோடி மதிப்பிலான தங்கம், வைரம் உள்ளிட்ட நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டதாக வருமான வரித்துறை வழக்கு பதிவு செய்தது.
இந்நிலையில் டி.கே.சிவகுமார் மீதான வருமான வரி வழக்கில் தொடர்புடைய 10 தொழிலதிபர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் நேற்று காலை வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஒரே நேரத்தில் பெங்களூரு, சென்னை, டெல்லி உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் நூற்றுக்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டனர். இதில் டி.கே.சிவகுமாருக்கு தொழில் ரீதியாக தொடர்புடைய பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து டி.கே.சிவகுமார், “கர்நாடகாவில் தேர்தல் நெருங்கும் நிலையில் என்னை குறி வைத்து, தொடர்ந்து வருமான வரி சோதனை நடத்தப்படுகிறது. அரசியல் ரீதியாக என்னை பழிவாங்குவதற்காகவே இத்தகைய சோதனைகள் தொடர்வதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது. என்னை பழிவாங்க நினைப்பவர்கள் நேரடியாக எனது வீட்டுக்கு வர வேண்டும். தொழில் ரீதியாக எனக்கு நெருக்கமானவர்களுக்கு தொல்லை கொடுக்கக் கூடாது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT