Published : 10 Aug 2017 10:13 AM
Last Updated : 10 Aug 2017 10:13 AM

சரியான நேரத்தில் கிடைத்தால் குஜராத் பேரவை தேர்தலில் வாக்குப்பதிவு ஒப்புகை சீட்டு இயந்திரம்: உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்

குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் ஒப்புகைச் சீட்டு அளிக்கும் வாக்குப் பதிவு இயந்திரம் சரியான நேரத்தில் கிடைத்தால் பயன்படுத்துவோம் என்று உச்ச நீதிமன்றத்தில் தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

குஜராத் சட்டப்பேரவைக்கு டிசம்பர் மாதம் தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் வாக்காளருக்கு தான் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதிப் படுத்தும் ஒப்புகைச் சீட்டு அளிக்கும் ஓட்டுப் பதிவு இயந்திரத்தை பயன்படுத்த வேண்டும் என்று ரமேஷ் வித்தல்பாய் படேல் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

ஏற்கெனவே கடந்த மாதம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஒப்புகை சீட்டு வழங்கும் ஓட்டுப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்தலாம் என்று தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் யோசனை தெரிவித்தனர். நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகி வாதிட்டார்.

அப்போது, தேர்தல் ஆணையம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் கூறியிருப்பதாவது:

தேர்தல் ஆணையத்திடம் ஒப்புகைச் சீட்டு வழங்கும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் இப்போது 53 ஆயிரம் உள்ளன. குஜராத் தேர்தலில் பயன்படுத்த வேண்டுமானால் 70 ஆயிரம் இயந்திரங்கள் தேவை. பிஇஎல், இசிஐஎல் நிறுவனங்களிடம் இருந்து இந்த வகை இயந்திரங்கள் ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் 48 ஆயிரமும், செப்டம்பருக்குள் மேலும் 25 ஆயிரமும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். குறிப்பிட்ட காலத்துக்குள் இந்த வகை இயந்திரங்கள் கிடைத்துவிட்டால் குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் அவற்றைப் பயன்படுத்துவோம். இந்த இயந்திரங்களை வைக்கவும் பராமரிக்கவும் பாதுகாக்கவும் மேலும் நிதி தேவைப்படுகிறது.

இவ்வாறு மனுவில் கூறப் பட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் பதிலால் திருப்தியடைந்த நீதிபதிகள், வழக்கை முடித்துவைக்க விரும்பினர். ஆனால், மனுதாரர்களில் ஒருவரான மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி வழக்கை ஒத்திவைக்க கோரியதால் இன்றைக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

இதற்கு தலைமை நீதிபதி கெஹர், ‘‘மனுதாரர் விரும்பியதை எல்லாம் தேர்தல் ஆணையம் செய்கிறது. நீதிமன்றத்தின் நேரத்தை நீங்கள் வீணடிக்கக் கூடாது. இதுவே வழக்கமாகி விட்டது’’ என்று அதிருப்தி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x