Published : 03 Aug 2017 01:07 PM
Last Updated : 03 Aug 2017 01:07 PM
குஜராத் மாநிலத்தில் மாநிலங்களவைத் தேர்தலில் வாக்குச்சீட்டில் நோட்டா (யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை) பயன்படுத்த இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
குஜராத் மாநிலத்தில் மாநிலங்களவைத் தேர்தலில் வாக்குச்சீட்டில் நோட்டா வாய்ப்பை அறிமுகப்படுத்த தலைமை தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து குஜராத் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று (புதன்கிழமை) மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது. காங்கிரஸைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகி, இந்த மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், மனு மீது வியாழக்கிழமை (இன்று) விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்தனர்.
இந்நிலையில், இன்று மனுவை விசாரித்த நீதிபதிகள் குஜராத் மாநிலத்தில் மாநிலங்களவைத் தேர்தலில் வாக்குச்சீட்டில் நோட்டா (யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை) பயன்படுத்த இடைக்கால தடை விதிக்க மறுப்பு தெரிவித்துவிட்டனர். ஆனால், மாநிலங்களவைத் தேர்தலில் நோட்டாவை பயன்படுத்தும் வாய்ப்பை வாக்குச் சீட்டில் வைப்பது அரசியல் சாசன சட்டத்துக்கு உட்பட்டதுதானா என்பது குறித்து விசாரிக்கப்படும் எனத் தெரிவித்தனர்.
மாநிலங்களவை தேர்தலில் நோட்டா வாய்ப்பு பொருந்தும் என்று கடந்த 2013-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு தங்களது அறிக்கைகளில் தெளிவாக கூறப்பட்டுள்ளது என்று தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
காங்., கோரிக்கை:
குஜராத்தில் ஆகஸ்ட் 8-ம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறுகிறது. வாக்குச் சீட்டில் நோட்டாவுக்கு ஓட்டளிக்கும் வாய்ப்பு இருக்கக் கூடாது என்று தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் கோரியது. மாநிலங்களவைத் தேர்தலில் நோட்டாவை பயன்படுத்தும் வாய்ப்பை வாக்குச் சீட்டில் வைப்பது அரசியல் சாசன சட்டத்துக்கும், தேர்தல் சட்டத்தின்படி மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்துக்கும் எதிரானது. மேலும் உச்ச நீதிமன்ற தீர்ப்புகளுக்கும் எதிரானது என்று காங்கிரஸ் தரப்பில் கூறப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT