Published : 23 Nov 2014 11:24 AM
Last Updated : 23 Nov 2014 11:24 AM

இந்தியாவின் முதல் போர்க்கப்பல் விக்ராந்த் உடைப்பு

இந்தியாவின் முதல் போர்க் கப்பலான ஐ.என்.எஸ்.விக்ராந்த் உடைக்கப்படுகிறது. 1943ம் ஆண்டு கட்டி முடிக்கப் பட்டு 1945ம் ஆண்டு முதல் இக்கப்பல் பயன்பாட்டுக்கு வந்தது. ஆரம்பத்தில் அதன் பெயர் எச்.எம்.எஸ்.ஹெர்குலிஸ் என்று இருந்தது. இந்தக் கப்பலை 1957ம் ஆண்டு இந்தியா வாங்கியது. 1959ம் ஆண்டு இது இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்டது. இது இந்தியாவின் முதல் போர்க்கப்பல் ஆகும்.

1971ம் ஆண்டு நடைபெற்ற இந்தியா பாகிஸ்தான் போர் உட்பட பல யுத்தங்களில் இந்தப் போர்க் கப்பல் தனது பங்களிப்பைச் செய் துள்ளது. இது 1997ம் ஆண்டு பயன்பாட்டில் இருந்து விலக்கப் பட்டது. பயன்பாட்டில் இல்லாத இந்தக் கப்பலை உடைக்க முடிவு செய்யப்பட்டு, கடந்த வியாழக் கிழமை முதல் பணிகள் தொடங்கப் பட்டுள்ளன. இந்தப் பணியில் சுமார் 200 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனை முழுவதுமாக உடைத்து முடிக்க சுமார் 7 அல்லது 8 மாதங்கள் ஆகலாம் என்று கூறப் படுகிறது.

இந்தக் கப்பலை உடைப்பதற்கு இந்த ஆண்டு ஏலம் விடப்பட்டது. அப்போது ரூ.63 கோடிக்கு மும்பையின் ஐ.பி.கமர்ஷியல்ஸ் எனும் தனியார் நிறுவனம் இதை வாங்கியது. அன்று முதல் சமீப காலம் வரை அந்தக் கப்பலை உடைக்க முடியாமல் இந்நிறுவனம் பல தடைகளைச் சந்தித்து வந்தது.

இந்தக் கப்பலை உடைக்கக் கூடாது என்று ‘சேவ் விக்ராந்த்' எனும் குழு பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது அனைத்துத் தடைகளையும் தாண்டி கப்பல் உடைக்கப்படுகிறது. இது குறித்து அக்குழுவின் தலைவர் கிரண் பைகங்கர் கூறும்போது, ‘‘இது இந்திய கடல்சார் வரலாற்றில் மிகவும் துக்ககரமான நாள் ஆகும். தன்னுடைய பெருமை என்று சொல்லிக்கொண்ட இந்திய கடற் படையே இதை உடைப்பதற்குச் சம்மதம் தெரிவித்திருப்பதுதான் இதில் மிகப்பெரும் வேதனை’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x