Published : 03 Aug 2017 10:12 AM
Last Updated : 03 Aug 2017 10:12 AM

கேரளாவில் சம்பவம்: பலாத்காரம் செய்ய வந்தவரின் நாக்கை கடித்து துண்டித்தார் பெண்

கேரளாவில் பாலியல் பலாத்காரம் செய்ய வந்தவரின் நாக்கை கடித்து துண்டித்தார் பெண்.

கேரள மாநிலம் கொச்சியைச் சேர்ந்த இளம் பெண் தனது பக்கத்து வீட்டுக்காரரான 30 வயதான நபர் மீது புகார் கொடுத்தார். புகாரில் கடந்த திங்கள்கிழமை இரவு தனது வீட்டை விட்டு வெளியே வந்தபோது பக்கத்து வீட்டைச் சேர்ந்த நபர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்தார் என்றும் முத்தமிட முயற்சித்தார் என்றும் கூறியுள்ளார். அந்த நபரின் நாக்கை தான் கடித்ததாகவும் இதனால் அந்த நபர் தப்பிஓடிவிட்டதாகவும் போலீஸாரிடம் அந்தப் பெண் கூறினார். தான் கடித்ததால் துண்டான அந்த நபரின் 2 செ.மீ. நீளமுள்ள நாக்கின் ஒரு பகுதியையும் போலீஸாரிடம் காட்டினார்.

இந்த புகாரைத் தொடர்ந்து நகரில் உள்ள மருத்துவமனைகளை போலீஸார் உஷார்படுத்தினர். இதில் நாக்கு துண்டான நபர் ஒரு தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டிருப்பது தெரிந்தது. பைக் விபத்து காரணமாக தனது நாக்கில் காயம் ஏற்பட்டதாக டாக்டர்களிடம் கூறி அந்த நபர் சிகிச்சை பெற்றதும் தெரிய வந்தது. அறுவை சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அந்த நபரை போலீஸார் கைது செய்தனர். அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோன்ற குற்றச்சாட்டுக்காக ஏற்கெனவே ஒருவாரம் நீதிமன்றக் காவலில் அந்த நபர் இருந்தார் என்று போலீஸார் தெரிவித்தனர்.

டாக்டர்கள் கூறுகையில், ‘‘பாதிக்கப்பட்டவருக்கு நாக்கில் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது. அவரது பேச்சு லேசாக பலவீனமடைந்துள்ளது’’ என்று தெரிவித்தனர்.

கேரளாவில் கடந்த 2 மாதங்களில் இதுபோன்ற பாலியல் பலாத்கார முயற்சி தாக்குதல் சம்பவம் நடப்பது இது 2-வது முறை. கடந்த ஜூன் மாதம் சட்டக்கல்லூரி மாணவி ஒருவர், தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற 52 வயதான சாமியாரின் பிறப்புறுப்பை வெட்டியதாக போலீஸில் தெரிவித்தார். சில வாரங்களில் தன்னை சாமியார் பலாத்காரம் செய்யவில்லை என்றும் போலீஸார்தான் அப்படி கூறும்படி கட்டாயப்படுத்தியதாகவும் அந்தப் பெண் கூறியது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x