Published : 07 Nov 2014 01:54 PM
Last Updated : 07 Nov 2014 01:54 PM

மோடியின் பாதையில் குறுக்கிடாதீர்: தாலிபானுக்கு சிவசேனா எச்சரிக்கை

'இந்துத்துவாவின் தீவிர ஆதரவாளராக இருக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் பாதையில் தாலிபான்கள் குறுக்கிட வேண்டாம்' என்று சிவசேனா எச்சரிக்கை விடுத்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடிக்கு பாகிஸ்தான் தாலிபான் பயங்கரவாத இயக்கம் மிரட்டல் விடுக்கும் வகையில் தனது ட்விட்டர் பக்கத்தில், "நரேந்திர மோடி, நீங்கள் நூற்றுக்கணக்கான முஸ்லிம் மக்களின் கொலையாளி. காஷ்மீர் மற்றும் குஜராத்தில் முஸ்லிம்கள் கொன்று குவிக்கப்பட்டதுக்கு நாங்கள் பழி தீர்ப்போம்" என்று வாகா தாக்குதலை குறிப்பிட்டு அதே போன்ற தாக்குதல் இந்தியாவிலும் நடத்தப்படும் என்று கூறி ட்வீட் செய்தது.

இந்த நிலையில், மிரட்டல் விடுத்த தாலிபான்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் சிவசேனா தனது அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில் தலையங்கம் வெளியிட்டுள்ளது.

அதில், "இஸ்லாமிய கொள்கை என்ற பெயரில் பாகிஸ்தானிலும் ஆப்கானிலும் குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்கள் படுகொலை செய்யப்படுகின்றனர். ஆனால் இதில் தாலிபான்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை.

இந்தியாவில் இதுவரை நடைபெற்றுள்ள தாக்குதல்களுக்கு அவர்களின் பங்கு உண்டு, ஆனால் இதில் இந்திய இஸ்லாமியர்களும் கொல்லப்பட்டுள்ளனர். இங்கு உள்ள இஸ்லாமியர்களை கொல்வதின் மூலம் நீங்கள் (தாலிபான்கள்) எந்த நியாயத்தை எடுத்துரைக்க நினைக்கிறீர்கள்.

அவர்களை பொறுத்தவரை இந்தியாவில் கொல்லப்படுபவர்கள் இஸ்லாமியர்கள் மற்றவர்கள் அல்லாவுக்கு எதிரிகள். இது தான் இஸ்லாத்தை துஷ்பிரயோகம் செய்வது.

பிரதமர் நரேந்திர மோடி இந்துதுவாவின் தீவிர ஆதரவாளராக திகழ்கிறார். அவர் பதவி ஏற்றதும் முதலில் கங்கைக்கு சென்று ஆரத்தி எடுத்து தனது இந்துத்துவ ஆதரவை வெளிப்படுத்தினார். இருந்தும் அவர் இஸ்லாமியர்களின் எதிரி அல்ல. இஸ்லாமியர்கள் சிலர் ஈடுபடும் செயலுக்கு தான் அவர் எதிரி. தாலிபான்கள் மோடியின் பாதையில் குறுக்கிடாமல் இருப்பதே நல்லது" என்று அந்த தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x