Last Updated : 18 May, 2017 02:22 PM

 

Published : 18 May 2017 02:22 PM
Last Updated : 18 May 2017 02:22 PM

முத்தலாக் வழக்கு: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு

முத்தலாக் வழக்கில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்.

முஸ்லிம் பெண்களை விவாகரத்து செய்ய பின்பற்றப்படும் முத்தலாக் நடைமுறையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரித்துவந்தது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதிகள் குரியன் ஜோசப், ரோஹின்டன் எப்.நாரிமன், யு.யு.லலித், அப்துல் நசீர் ஆகிய ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்தது.

மே 11-ம் தேதி தொடங்கி தொடர்ந்த 6 நாட்களாக நடைபெற்ற இந்த விசாரணையில் மத்திய அரசு, அனைத்து இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம், அனைத்து இந்திய முஸ்லிம் பெண்கள் தனிநபர் சட்ட வாரியம் மற்றும் பிற தரப்புகள் தங்கள் வாதங்களை முன்வைத்தன.

இந்நிலையில் இந்த வழக்கில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.

வழக்கில் சில சுவாரஸ்யமான வாத விவாதங்கள்:

* முத்தலாக் முறைக்கு மறுப்பு தெரிவிக்கும் அதிகாரத்தை முஸ்லிம் பெண்களுக்கு திருமண ஒப்பந்தம் கையெழுத்தாகும் போதே வழங்கலாமா? திருமணங்களை நடத்திவைக்கும் தலைமை காஜிகளுக்கு இந்த நடைமுறையை பின்பற்றுமாறு அறிவுறுத்தலாமா? என உச்ச நீதிமன்றம் யோசனை கோரியது.

* ராமர் அயோத்தியில் பிறந்தார் என்ற நம்பிக்கைக்கு இணையானது முஸ்லிம்கள் முத்தலாக் முறை மீது கொண்டுள்ள நம்பிக்கை என உச்ச நீதிமன்றத்தில் முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபல் வாதிட்டார்.

* பாவம் என்று கடவுளால் கருதப்படும் ஒரு செயலை மனிதன் இயற்றும் சட்டங்களால் எப்படி நியாயப்படுத்த முடியும்? என்று உச்ச நீதிமன்றம் கேள்வி.

* முத்தலாக் நடைமுறை முஸ்லிம்களால் 1400 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வருகிறது. மத நம்பிக்கை அடிப்படையிலான இந்த வழக்கத்தை நீதிமன்றம் கேள்வி கேட்க முடியாது என்று அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் வாதிட்டது.

* பல்வேறு தரப்பினரும் தங்கள் வாதங்களை முன்வைத்த நிலையில் முத்தலாக் வழக்கில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x