Published : 11 Aug 2017 10:14 AM
Last Updated : 11 Aug 2017 10:14 AM
கேள்வி கேட்க லஞ்சம் பெற்ற வழக்கில் 11 முன்னாள் எம்.பி.க்கள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய டெல்லி சிறப்பு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
கடந்த 2005-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்பதற்காக பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் லஞ்சம் வாங்கியதாக கூறப்படுகிறது. இதை ரகசியமாக படம் பிடித்த 2 பத்திரிகையாளர்கள், அதை தனியார் தொலைக்காட்சியில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினர். இது தொடர்பாக சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்திய தண்டனை சட்டம் (குற்றச் சதி) மற்றும் ஊழல் தடுப்பு சட்டம் ஆகியவற்றின் கீழ் 11 எம்.பி.க்கள் உட்பட 12 மீது டெல்லி போலீஸார் நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு சிறப்பு நீதிபதி பூனம் சவுத்ரி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீதான புகாரில் முகாந்திரம் இருப்பதாகக் கூறிய நீதிபதி, அனைவர் மீதும் குற்றச்சாட்டு பதிவு செய்ய உத்தரவிட்டார்.
எனினும், குற்றம்சாட்டப்பட்டவர்களில் 3 பேர் மட்டுமே நேற்று ஆஜராயினர். மற்றவர்கள் விலக்கு கோரியிருந்தனர். இதனால், இந்த வழக்கின் விசாரணையை வரும் 28-ம் தேதிக்கு ஒத்தி வைத்த நீதிபதி, அன்றைய தினம் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட உள்ளதால் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார். - பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT