Published : 09 Aug 2017 05:06 PM
Last Updated : 09 Aug 2017 05:06 PM
நாட்டின் பாதுகாப்பு விவகாரத்தில் எந்த ஒரு சவாலையும் எதிர்கொள்ளும் வலுவுடையது இந்திய ராணுவப்படை என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி மாநிலங்களவையில் தெரிவித்தார்.
மேலும் 1962 போரிலிருந்து பாடம் கற்றுக் கொண்டுவிட்டோம் என்றும் அருண் ஜேட்லி தெரிவித்தார்.
மாநிலங்களவையில் அருண் ஜேட்லி பேசியதாவது:
1948-லிருந்து பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீரின் பகுதிகளை மீட்க வேண்டும் என்று நாட்டு மக்கள் விரும்புகின்றனர். இத்தனையாண்டுகளாக நாடு பலவித சவால்களைச் சந்தித்து வந்துள்ளது. ஆனால் ஒவ்வொரு சவாலிலும் தேசம் மேலும் வலுவடைந்தே வந்துள்ளது.
இன்றும் அண்டை நாடுகளிடமிருந்து நாடு சவால்களைச் சந்தித்து வருகிறது. 1962 போரிலிருந்து பாடம் கற்றுக்கொண்டுள்ளோம். இன்றைய தினத்தில் நம் ஆயுதப்படைகள் எந்த ஒரு சவாலையும் எதிர்கொள்ளத் தயார் நிலையிலேயே உள்ளன.
1962-ஐ ஒப்பிடும்போது 1965 மற்றும் 1971 போர்களில் இந்திய ராணுவம் வலுவடைந்துள்ளது.
இன்றும் சவால்கள் உள்ளன என்பதை ஒப்புக் கொள்கிறேன். சிலர் நம் நாட்டின் ஒற்றுமைக்கும், இறையாண்மைக்கும் சவால்கள் அளிக்கின்றனர். ஆனால் நம் தைரியமான ராணுவ வீரர்கள் நம் நாட்டை பாதுகாப்பாக வைத்திருப்பார்கள் என்று உறுதியாகக் கூறுகிறேன். இந்தச் சவால்கள் கிழக்கு எல்லையாக இருந்தாலும் சரி மேற்கு எல்லையாக இருந்தாலும் சரி. நாட்டின் பாதுகாப்புக்காக ஆயுதப்படையினர் எந்த ஒரு தியாகத்தையும் செய்யத் தயாராக இருக்கிறார்கள்.
சுதந்திரம் அடைந்த பிறகு தொடக்க காலங்களில் நாம் நெருக்கடியைச் சந்தித்தோம். நம் அண்டை நாடு காஷ்மீர் மீது ஒரு கண் வைத்திருந்தது. இன்றும் கூட நாட்டின் ஒரு பகுதி பிரிந்து போனதை நாம் மறக்க முடியாது, இன்றும் அப்பகுதியை மீட்க மக்கள் விரும்புகிறார்கள்.
நாடு பயங்கரவாதம் மற்றும் இடதுசாரி தீவிரவாதத்தினால் பெரிய சவால்களை சந்தித்து வருகிறது. நாடும், மக்களவையும் பயங்கரவாதத்தை ஒருமித்த குரலில் எதிர்க்க வேண்டும். அரசியல், மதம், பயங்கரவாதம் ஆகிய வன்முறைகளுக்கு இங்கு இடமில்லை.
நாடு இத்தகைய வன்முறைகளிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு கூறினார் ஜேட்லி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT