Last Updated : 18 Aug, 2017 08:51 AM

 

Published : 18 Aug 2017 08:51 AM
Last Updated : 18 Aug 2017 08:51 AM

ராஜீவ் காந்தியை கொல்ல பயன்படுத்திய வெடிகுண்டு பற்றிய விசாரணை விவரத்தை தெரிவிக்க வேண்டும்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

ராஜீவ்காந்தியை கொலை செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு பற்றிய விசாரணை விவரங்களைத் தெரிவிக்கும்படி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் கடந்த 21.5.1991-ம் ஆண்டு நடந்த காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றபோது மனித வெடிகுண்டு தனு மூலம் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொல்லப்பட்டார். குண்டுவெடிப்பில் அவருடன் மேலும் 14 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டு சிறையில் இருந்துவரும் பேரறிவாளன் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அவரது மனுவில், ‘ராஜீவ் காந்தியை கொல்ல பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு தயாரிக்க பேட்டரி வாங்கி கொடுத்ததாக என் மீது குற்றம் சாட்டப்பட்டு தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. ராஜீவ் காந்தி கொலையில் உள்ள சதி பின்னணி குறித்தும், வெடிகுண்டு தயாரிக்கப்பட்ட விவரம் குறித்தும், சர்வதேச தொடர்புகள் குறித்தும் விசாரிக்கும்படி தடா நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், இந்த உத்தரவின்படி சிபிஐ புலனாய்வுப் பிரிவினரோ, பல்நோக்கு கண்காணிப்பு குழு (எம்டிஎம்ஏ) பிரிவினரோ எந்த விசாரணையும் நடத்தவில்லை. மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சிபிஐ புலனாய்வுப் பிரிவினர் மூடி முத்திரையிடப்பட்ட உறையை நீதிமன்றத்தில் ஒப்படைக்கின்றனர். இதை நீதிமன்றம் பல ஆண்டுகளாக பிரித்துக்கூட பார்ப்பதில்லை. கடந்த 17 ஆண்டுகளாக இந்த விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை. எனவே, இந்த விசாரணை விவரங்களைத் தெரிவிக்க உத்தரவிட வேண்டும்’ என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், நவீன் சின்ஹா அடங்கிய அமர்வு முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. பேரறிவாளன் சார்பில் வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன் ஆஜரானார். அப்போது ராஜீவ் கொலையின் சதி பின்னணி குறித்த விசாரணை என்ன ஆனது? என்று மத்திய அரசிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், ராஜீவ் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு தயாரிக்கப்பட்டது எப்படி என்பது குறித்த விசாரணை விவரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கின் மறு விசாரணை அடுத்த வாரம் நடைபெறும் என்று உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x