Published : 20 Aug 2017 12:49 PM
Last Updated : 20 Aug 2017 12:49 PM
சத்தீஸ்கர் கோசாலையில் 200 பசுக்கள் உயிரிழந்த விவகாரத்தில் அதன் உரிமையாளரும் பாஜக பிரமுகருமான ஹரிஷ் வர்மா கைது செய்யப்பட்டுள்ளார்.
சத்தீஸ்கரின் துர்க் மாவட்டம் ஜமுல் நகராட்சியின் துணைத் தலைவராக ஹரிஷ் உள்ளார். இவர் தனது சொந்த ஊரான ராஜ்பூரில் கோசாலை நடத்தி வருகிறார். இதற்கு அரசு நிதியுதவி வழங்குவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 2 நாட்களில் கோசாலையில் 200 பசுக்கள் உயிரிழந்துள்ளன. இதுகுறித்து சத்தீஸ்கர் ராஜ்ய கவ் சேவா ஆயோக் அமைப்பு போலீஸில் புகார் செய்துள்ளது.
அதில், “வர்மாவின் கோசாலையை ஆய்வு செய்ய ஒரு குழுவை அனுப்பி வைத்தோம். அங்கு போதிய அடிப்படை வசதிகள் இல்லாததே பசுக்களின் உயிரிழப்புக்கு காரணம் என தெரியவந்துள்ளது. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில், ஹரிஷ் வர்மாவை கைது செய்துள்ளதாக துர்க் சரக ஐஜி திபான்ஷு கப்ரா நேற்று தெரிவித்தார்.
சுற்றுச்சுவர் விழுந்ததே காரணம்
இதுகுறித்து வர்மா கூறும்போது, “கடந்த 15-ம் தேதி கனமழை பெய்ததால் கோசாலையின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இதனால் பசுக்கள் உயிரிழந்தன. இந்த கோசாலையில் 220 பசுக்களை பராமரிக்கமுடியும். ஆனால் 650பசுக்கள் பராமரிக்கப்படுகின்றன. நிலுவையில் உள்ள ரூ. 10 லட்சத்தை வழங்கக் கோரி பல முறை அரசுக்கு கோரிக்கை வைத்தபோதிலும் இதுவரை எவ்வித நிதியுதவியும் கிடைக்கவில்லை” என்றார்.
இதனிடையே சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஆர்.பி.சிங் கூறும்போது, “வர்மாவின் கோசாலையில் கடந்த 3 நாட்களில் 300 பசுக்கள் உயிரிழந்ததாக உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT