Published : 26 Aug 2017 04:29 PM
Last Updated : 26 Aug 2017 04:29 PM
ஏர் இந்தியாவின் மும்பை-கொச்சி விமானம் ஒன்று புறப்பட்ட சில நிமிடங்களிலேயே தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதன் காரணமாக விமானம் புறப்படுவதற்கு பல மணிநேரம் தாமதம் ஏற்பட்டது.
'ஏர்பஸ் ஏ-319 விமானம் 054'ல் கண்டறியப்பட்ட தொழில்நுட்பக் கோளாறு என்னவென்று விளக்கமாக தெரிவிக்கப்படவில்லை. குழந்தைகள் உள்ளிட்ட ஏறத்தாழ 115 பயணிகள் விமானத்திற்குள் இருந்ததாகக் கூறப்படுகிறது. விமானம் புறப்படுவதற்கு முன்னதாக வழக்கமான சோதனைகள் நடைபெற்று அதிகாலை 5.30 மணி வாக்கில் விமானம் புறப்பட்டது.
ஆனால் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக புறப்பட்ட வேகத்திலேயே விமானம் தரையிறக்கப்பட்டது. விமானம் திரும்பிய உடன் விமானப் பராமரிப்புப் பொறியாளர்கள் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு கண்டறிவதில் முனைந்தனர். இப்பணி தொடர்ந்து கொண்டிருந்தநிலையில் விமானத்திற்கு உள்ளேயே பயணிகள் இருந்தனர்.
ஏற்கெனவே இரண்டு மணிநேரம் தாமதமான நிலையில், விமானம் வானில் பறந்து செல்வதற்கு ஏதுவான நிலையில் இல்லை என்று திடீரென அறிவிக்கப்பட்டது.
இதனால் பயணிகள் விமானத்திலிருந்து இறக்கிவிடப்பட்டனர். விமான நிலையத்தின் முனைய கட்டிடத்திற்கு அவர்கள் திரும்பினர்.
ஏறத்தாழ காலை 8.50க்கு மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது. விதிமுறைகளின்படி பயணிகள் பரிசோதனைகளுக்கு மீண்டும் உட்படுத்தப்பட்டு மூன்றரை மணி நேர தாமதத்தோடு கொச்சி வந்து சேர்ந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT