Published : 08 Aug 2017 03:12 PM
Last Updated : 08 Aug 2017 03:12 PM
176 எம்எல்ஏக்களின் வாக்குப்பதிவோடு குஜராத் மாநிலங்களவைத் தேர்தல் முடிந்தது. அதில் 8 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு வாக்களித்தனர் என்று அக்கட்சியின் பொறுப்பாளர் கெலாட் தெரிவித்துள்ளார்.
குஜராத்திலிருந்து மாநிலங்களவைக்குத் தேர்வான 3 எம்.பி.க்களின் பதவிக் காலம் விரைவில் முடிய உள்ளது. இதற்கான தேர்தல் இன்று நடைபெற்று முடிந்துள்ளது. இதில் பாஜக சார்பில் கட்சித் தலைவர் அமித் ஷாவும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியும் வேட்பாளர்களாக போட்டியிட்டனர். காங்கிரஸ் சார்பில் அக்கட்சித் தலைவர் சோனியா காந்தியின் அரசியல் செயலர் அகமது படேல் போட்டியிட்டார்.
முன்னதாக, குஜராத் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் சங்கர் சிங் வகேலா, காங்கிரஸில் இருந்து விலகினார். அவரது ஆதரவாளர்களான 6 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். அவர்களில் பல்வந்த் சிங் ராஜ்புத், பாஜக சார்பில் மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பாளராக முன் நிறுத்தப்பட்டுள்ளார். 3 இடங்களுக்கு 4 பேர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டதால் காங்கிரஸ் வேட்பாளர் அகமது படேலின் வெற்றி கேள்விக்குறியானது.
இந்நிலையில், பாஜக குதிரை பேரத்தில் ஈடுபடுவதாகக் கூறி, 44 காங்கிரஸ் எம்எல்ஏக்களை பெங்களூருவில் உள்ள சொகுசு ஓட்டலில் தங்க வைத்திருந்தது கட்சி மேலிடம். இன்று நடைபெற்ற தேர்தலுக்காக அவர்கள் அனைவரும் நேற்று காலை பெங்களூருவிலிருந்து அழைத்து வரப்பட்டனர்.
இந்நிலையில் வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. இதில் காங்கிரஸ் எம்எல்ஏக்களில் பலர் பாஜகவுக்கு வாக்களித்தனர். குறிப்பாக 8 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு வாக்களித்ததாக குஜராத் விவகாரங்களுக்கான காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாகப் பேசிய அவர், ‘’முன்னாள் காங்கிரஸ் தலைவர் வகேலா மற்றும் அவரின் மகன் உட்பட 7 பேர் பாஜகவுக்கு ஆதரவாக வாக்களிப்பர் என்று எதிர்பார்த்தோம். அத்துடன் 44 எம்எல்ஏக்களில் ஒருவரான கம்ஷி படேலுன் பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளார் ‘’என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT