Published : 30 Aug 2017 09:46 AM
Last Updated : 30 Aug 2017 09:46 AM

உயிருக்குப் போராடும் பாகிஸ்தான் குழந்தைக்கு மருத்துவ விசா வழங்கப்படும்: அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உறுதி

உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள பாகிஸ்தான் குழந்தைக்கு மருத்துவ விசா வழங்கப்படும் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உறுதி அளித்துள்ளார்.

பாகிஸ்தானியர்கள் இந்தியாவில் மருத்துவ சிகிச்சை பெறுவதற்கு அந்நாட்டு வெளியுறவு ஆலோசகர் சர்தாஜ் அஜீஸ் பரிந்துரை செய்தால் மட்டுமே விசா வழங்கப்படும் என்று கடந்த மே மாதம் இந்தியா அறிவித்தது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தாக்குதல் நடத்தும் தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் தொடர்ந்து உதவி வருகிறது. இதுதவிர, அந்நாட்டு ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லையில் தாக்குதல் நடத்தி வருகிறது.

இதுபோன்ற பல்வேறு காரணங்களால் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான உறவு சீர்குலைந்துள்ளதால் மத்திய அரசு இவ்வாறு அறிவித்தது.

ஆனாலும் இந்தப் பரிந்துரை பெறமுடியாத பாகிஸ்தானியர்கள் பலர் தங்கள் குழந்தையின் சிகிச்சைக்கு உதவும்படி மத்திய அமைச்சர் சுஷ்மாவிடம் ட்விட்டரில் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், “மருத்துவ விசா கோரி பாகிஸ்தானில் இருந்து வந்துள்ள விண்ணப்பங்களில் நம்பகத்தன்மை வாய்ந்த அனைத்து மனுக்களுக்கும் விசா வழங்கப்படும்” என்று கடந்த 15-ம் தேதி சுதந்திர தினத்தில் சுஷ்மா அறிவித்தார்.

இதற்கிடையே பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம், குவெட்டா நகரில் இதயக் கோளாறால் பாதிக்கப்பட்ட ரோஹான் என்ற குழந்தை இந்தியாவில் சிகிச்சை பெறுவதற்கு மருத்துவ விசா கோரி விண்ணப்பம் செய்திருந்தனர். இக்குழந்தை உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகக் கூறி, அதன் உறவினர்கள் இர்ஃபான் ஷா, சையது சைஃபுல்லா ஆகியோர் ட்விட்டரில் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் உதவியை நாடினர். இதற்கு சுஷ்மா அளித்துள்ள பதிலில், குழந்தையின் சிகிச்சைக்கு மருத்துவ விசா வழங்குவதாக உறுதி அளித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x