Published : 08 Aug 2017 09:38 AM
Last Updated : 08 Aug 2017 09:38 AM
ஹரியாணா பாஜக தலைவரின் மகன் ஈவ்-டீசிங்கில் ஈடுபட்ட விவகாரத்தில் போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன் என்று பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.
ஹரியாணா பாஜக தலைவராக சுபாஷ் பர்லா உள்ளார். இவரது மகன் விகாஸும் அவரது நண்பர் ஆசிஷும் கடந்த 5-ம் தேதி இரவு சண்டிகரில் தனியாக காரில் சென்ற பெண்ணை தங்களது காரில் துரத்தியுள்ளனர்.
இதுதொடர்பாக அந்த பெண் போலீஸுக்கு தகவல் தெரிவித்தார். போலீஸார் விரைந்து வந்து அப்பெண்ணை மீட்டனர். அவர் அளித்த புகாரின்பேரில் விகாஸ், ஆசிஷை போலீஸார் கைது செய்து பின்னர் ஜாமீனில் விடுதலை செய்தனர். வழக்கின் முக்கிய சாட்சியாக சாலையோர சிசிடிவி கேமராக்கள் கருதப்பட்டன. ஆனால் முக்கிய சந்திப்புகளில் இருந்த 9 கேமராக்களும் செயல்படவில்லை என்று போலீஸார் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக காங்கிரஸ், மார்க்சிஸ்ட் தலைவர்கள் கூறியபோது, வழக்கை நீர்த்துப் போகச் செய்ய ஆளும் பாஜக தலைவர்கள் போலீஸாருக்கு நிர்பந்தம் கொடுப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண் வர்ணிகா, ஹரியாணா மாநில அரசில் மூத்த ஐஏஎஸ் அதிகாரியாகப் பணியாற்றும் வீரேந்தர் என்பவரின் மகள் ஆவார். வழக்கு குறித்து தந்தையும் மகளும் கூறியபோது, இந்த விவகாரத்தில் போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நிச்சயமாக நாங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம் என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT