Published : 24 Aug 2017 09:44 AM
Last Updated : 24 Aug 2017 09:44 AM
கர்நாடக மாநில பாஜக தலைவர் எடியூரப்பாவை சட்ட விரோதமாக நிலம் ஒதுக்கீடு செய்த வழக்கில் கைது செய்ய போலீஸாருக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
கடந்த 2008-ம் ஆண்டு கர்நாடக முதல்வராக இருந்த எடியூரப்பா விதிமுறைகளை மீறி, சட்ட விரோதமாக 257 ஏக்கர் அரசு நிலத்தை தனியாருக்கு ஒதுக்கீடு செய்ததாக புகார் எழுந்தது. இதை விசாரித்த கர்நாடக ஊழல் தடுப்பு போலீஸார் எடியூரப்பா மீது 2 வழக்குகளை பதிவு செய்து, விசாரணைக்கு ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பினர்.
இந்நிலையில், எடியூரப்பா தன் மீதான 2 வழக்குகளை ரத்து செய்ய கோரியும், ஊழல் தடுப்பு போலீஸார் கைது செய்ய தடை விதிக்கவும் கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இம்மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது எடியூரப்பா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நாகேஷ், ‘இவ்வழக்கு எவ்வித ஆதாரமும் இல்லாமல் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தொடுக்கப்பட்டுள்ளது. அரசு நிலத்தை ஒதுக்கீடு செய்ய முதல்வருக்கு அதிகாரம் உள்ளது. எனவே இவ்வழக்கை ரத்து செய்து, எடியூரப்பாவைக் கைது செய்யவும் தடை விதிக்க வேண்டும்’ என வாதிட்டார்.
இதையடுத்து கர்நாடக உயர் நீதிமன்றம், ‘இவ்வழக்கின் அடுத்த விசாரணை வருகிற 28-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது. அதுவரை ஊழல் தடுப்பு போலீஸார் எடியூரப்பாவை கைது செய்யக் கூடாது. இந்த காலக்கட்டத்தில் எடியூரப்பாவிடம் விசாரணை நடத்தவும் கூடாது’என உத்தரவிட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT