Published : 20 Aug 2017 12:45 PM
Last Updated : 20 Aug 2017 12:45 PM

உ.பி.யில் விரைவு ரயில் தடம் புரண்டு 23 பேர் பலி: படுகாயமடைந்த 60-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி

உத்தரபிரதேசத்தில் உத்கல் விரைவு ரயில் நேற்று மாலை தடம் புரண்டதில் 23 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த 60-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புரி-ஹரித்வார் கலிங்கா உத்கல் விரைவு ரயில் ஒடிசா மாநிலம் புரி நகரிலிருந்து உத்தராகண்ட் மாநிலம் ஹரித்வாருக்கு நேற்று மாலை சென்று கொண்டிருந்தது. அப்போது உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டம் கதாவ்லி என்ற இடத்தில் 14 பெட்டிகள் தடம் புரண்டன.

இதையடுத்து மாவட்ட நிர்வாகத்தினரும், பேரிடர் மீட்புப் படையினரும் சம்பவ இடத்துக்குச் சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 11 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் காயமடைந்த 60-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு, “உத்கல் ரயில் தடம் புரண்ட பகுதியில் விரைவாக மீட்புப் பணிகளை மேற்கொள்ளுமாறு உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விபத்துக்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பலர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டனர்.இந்த ரயில் விபத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டுள்ள மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், மீட்புப் பணிக்கு தேவையான உதவிகள் செய்யப்படும் என்று அறிவித்தார்.

இழப்பீடு

இந்த விபத்தில் பலியான தங்கள் மாநிலத்தைச் சேர்ந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் இழப்பீடு வழங்கப்படும் என ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார். இதுபோல உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3.5 லட்சமும் படுகாயமடைந்தோருக்கு ரூ.50 ஆயிரமும் லேசான காயமடைந்தோருக்கு ரூ.25 ஆயிரமும் இழப்பீடு வழங்கப்படும் என ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு அறிவித்துள்ளார்.

இந்த விபத்து காரணமாக அந்த வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சேதமடைந்த ரயில் பாதையை சீரமைக்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே, இந்த ரயிலில் பயணம் செய்தவர்கள் தரை வழியாக ஹரித்வாருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x