Published : 06 Aug 2017 12:18 PM
Last Updated : 06 Aug 2017 12:18 PM

உத்தராகண்ட்டில் கனமழை, நிலச்சரிவு: பத்ரிநாத், மானசரோவர் யாத்திரை பாதிப்பு

உத்தராகண்ட் மாநிலத்தில் கனமழை மற்றும் நிலச்சரிவுகளால் பத்ரிநாத், கைலாஷ் மானசரோவர் புனித யாத்திரைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள பத்ரிநாத் கோயில் மற்றும் இமயமலையில் உள்ள மானசரோவருக்கு ஆண்டுதோறும் பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொள்கின்றனர். இந்த ஆண்டும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் யாத்திரை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் உத்தராகண்ட் மாநிலத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு சாலைகள் அடைக்கப்பட்டுவிட்டன. இதனால் பத்ரிநாத், கைலாஷ் மானசரோவர் யாத்திரை தடைபட்டுள்ளது.

குறிப்பாக சமோலி மாவட்டம் லம்பாகாட் பகுதியில் பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு காரணமாக சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பத்ரிநாத் யாத்திரை மேற்கொண்டுள்ள 14-வது குழு பக்தர்கள் திதிஹாட் பகுதியில் சிக்கி தவிக்கின்றனர்.

எனினும் சீக்கியர்களின் ஹேம்குந்த் சாகேப் யாத்திரை வழக்கம் போல் நடைபெற்று வருகிறது. கங்கோத்ரி, யமுனோத்ரி செல்லும் பாதைகள் பாதிக்கப்படாததால் ஏராளமான பக்தர்கள் யாத்திரை மேற்கொண்டுள்ளனர்.

இதற்கிடையில் கங்கை உட்பட பல நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குனிகாட் பகுதியில் மேகவெடிப்பு காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சில வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. கவுரிகுந்த் மற்றும் ருத்ரபிரயாகை பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் உத்தராகண்ட்டில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. - ஐஏஎன்எஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x