Published : 26 Aug 2017 09:46 AM
Last Updated : 26 Aug 2017 09:46 AM

ஆதரவாளர்கள் வன்முறையால் சேதம்: தேரா சச்சா அமைப்பிடம் இழப்பீடு வசூலிக்கலாம்- பஞ்சாப் - ஹரியாணா உயர் நீதிமன்றம் உத்தரவு

ஆன்மிக குரு குர்மீத் ராம் ரஹீம் சிங்கின் ஆதரவாளர்கள் வன்முறை, தீ வைப்பில் ஈடுபடுவதால் ஏற்படும் சொத்து இழப்பை தேரா சச்சா சவுதா அமைப்பிடம் இருந்து வசூலிக்கவேண்டும் என்று பஞ்சாப், ஹரியாணா உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்தது.

இந்த தகவலை அரசு தரப்பு மூத்த வழக்கறிஞர் தெரிவித்தார்.

தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவருக்கு எதிராக சிறப்பு சிபிஐ நீதிமன்ற பிறப்பித்த தீர்ப்பு காரணமாக உருவாகும் கொந்தளிப்பு நிலைமையை சமாளிக்க தேவைப்பட்டால் பாதுகாப்புப் படைகளை பயன்படுத்தி ஒடுக்குமாறும் ஆயுதத்தை பயன்படுத்துமாறும் ஹரியாணா அரசுக்கு உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் அமர்வு ஆணையிட்டது.

நீதிபதிகள் அமர்வு இந்த பிரச்சினை தொடர்பாக நாளையும் (இன்று) விசாரிக்க உள்ளது என கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சத்திய பால் ஜெயின் தெரிவித்தார்.

போலீஸ் தடை உத்தரவையும் மீறி ராம் ரஹீம் சிங் ஆதரவாளர்கள் சுமார் 1.5 லட்சம் பேர் பஞ்சகுலா மாவட்டத்துக்குள் குவிந்துள்ளதால் சட்டம் ஒழுங்கு சீர்குலையும் என தெரிவித்து இந்த பகுதிவாசி ஒருவர் பொது நல வழக்கு தொடுத்திருந்தார். அந்த மனுவை தற்காலிக தலைமை நீதிபதி எஸ்.சிங் சரோன், நீதிபதி அவனீஷ் ஜிங்கன்,நீதிபதி சூர்யகாந்த் ஆகியோர் அடங்கிய முழு அமர்வு விசாரித்தது.

ராம் ரஹீம் ஆதரவாளர்கள், சொத்துகளை சேதம் செய்தால் அதை வீடியோவில் பதிவுசெய்து முழு இழப்பையும் தேரா சச்சா அமைப்பிடம் இருந்து வசூலிக்கவேண்டும் என்று நீதிபதிகள் தமது உத்தரவில் குறிப்பிட்டனர் என்று ஜெயின் தெரிவித்தார்.

சட்டம் ஒழுங்கு சீர்குலைவு ஏற்படாதவகையில் மிக கவனமாக செயல்படுமாறு பஞ்சாப், ஹரியாணா, சண்டிகர் யூனியன் பிரதேச நிர்வாகங்களுக்கு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டது.

தீர்ப்பு காரணமாக எழும் நிலவரத்தை கட்டுக்குள் கொண்டுவர அதிகாரிகள் எடுக்கும் நடவடிக்கையில் அரசியல் தலைவர்களோ அமைச்சர்களோ தலையிடக்கூடாது . அரசியல் தலைவர்களோ, மதத் தலைவர்களோ வன்முறையை தூண்டும் வகையில் பேசினால் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யலாம் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x