Published : 13 Aug 2017 09:12 AM
Last Updated : 13 Aug 2017 09:12 AM
கடந்த 2004-ம் ஆண்டு கொலை வழக்கில் குஜராத் பாஜக எம்எல்ஏ ஜெயராஜ் சிங் ஜடேஜாவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குஜராத்தின் கொண்டல் தொகுதி எம்எல்ஏ ஜெயராஜ் சிங் ஜடேஜா. இவருக்கும் நிலேஷ் மோகன் ரயானி என்பவருக்கும் இடையே 35 ஏக்கர் நிலத்தை கைப்பற்றுவதில் தகராறு இருந்துள்ளது.
கடந்த 2004 பிப்ரவரி 8-ம் தேதி தனது நண்பர்களுடன் காரில் சென்று கொண்டிருந்த ரயானியை. எம்எல்ஏ ஜெயராஜ் சிங் வழிமறித்து துப்பாக்கியால் சுட்டதில் ரயானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது நண்பர் ஜெகதீஷ் படுகாய மடைந்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக எம்எல்ஏ ஜெயராஜ் சிங் ஜடேஜா உட்பட 16 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த ராஜ்காட் விரைவு நீதிமன்றம் ஜடேஜாவை விடுதலை செய்தது. எனினும் அவரது கூட்டாளி சமீர் பதானுக்கு ஆயுள் தண்டனை விதித்தது. மற்ற அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
இதை எதிர்த்து குஜராத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கை நீதிபதிகள் அகில் குரேஷி, பிரேன் வைஷ்ணவ் விசாரித்து எம்எல்ஏ ஜெயராஜ் சிங் ஜடேஜா, அவரது கூட்டாளிகள் அமர்ஜித் சிங் அனிரூத் ஜடேஜா, பகவத் ராணா ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தனர். 3 பேரும் வரும் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் சரண் அடைய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். ராஜ்காட் விரைவு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்த சமீர் பதான் விடுதலை செய்யப்பட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT