Published : 16 Aug 2017 12:40 PM
Last Updated : 16 Aug 2017 12:40 PM
எல்லையில் சண்டை நிறுத்த உடன்பாட்டைத் தொடர்ந்து மீறி வரும் பாகிஸ்தான் ராணுவம், புதன்கிழமை அன்று காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் தாக்குதல் நடத்தியது.
இதுகுறித்துப் பேசிய பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர், ''சிறிய ரக பீரங்கிகள், ஆயுதங்கள், தானியங்கிப் பொருட்களைக் கொண்டு பாகிஸ்தான் ராணுவம் தாக்குதலைத் தொடங்கியது.
இதற்கு இந்தியத் தரப்பில் உறுதியாகவும், திறம்படவும் பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது'' என்றார்.
கடந்த ஆகஸ்ட் 12-ம் தேதி ஜம்மு காஷ்மீரில் பூஞ்ச் மாவட்டத்தை ஒட்டிய எல்லைப் பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் பெண் ஒருவர் பலியானார். குப்வாரா பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ அதிகாரி ஒருவர் காயமடைந்தார்.
கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி பூஞ்ச் மாவட்டத்திலுள்ள கிருஷ்ணாகாடி பகுதியில் பாகிஸ்தான் படைகள் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் பவன் சிங் சுக்ரா (21) என்ற இளைஞர் கொல்லப்பட்டார்.
பாக். அத்துமீறல் அதிகரிப்பு
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய எல்லைப் பகுதியில் தாக்குதல் நடத்தி வருவது இந்த ஆண்டில் கணிசமாக அதிகரித்துள்ளது.
கடந்த ஜூன் மாதத்தில் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் 23 முறை அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இரண்டு முறை எல்லையில் தீவிரவாதிகள் ஊடுருவ முயன்றனர். இது தவிர பாக். எல்லை பாதுகாப்புப் படையினரும் ஒரு முறை தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். தீவிரவாதிகள் ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டது. கடந்த ஜூன் மாதம் நடந்த தாக்குதலில் ராணுவ வீரர்கள் மூன்று பேர் உட்பட 4 பேர் கொல்லப்பட்டனர். 12 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதலால் ஜூலை மாதத்தில் 9 வீரர்கள் உட்பட 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 18 பேர் காயமடைந்துள்ளனர்.
கடந்த மே மாதத்தில் மட்டும் அதிகபட்சமாக எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் 79 முறை அத்துமீறி தாக்குதல் நடத்தியது.
2016-ல் ஆண்டு முழுவதும் பாகிஸ்தான் 228 முறை அத்துமீறி தாக்குதல் நடத்தியிருந்த நிலையில், இந்த ஆண்டு ஆகஸ்ட் 1 வரை மட்டுமே பாக். 285 முறை தாக்குதல்களை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் எல்லைப் பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT