Published : 07 Aug 2017 09:53 AM
Last Updated : 07 Aug 2017 09:53 AM
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் ஷபீர் ஷாவின் நெருங்கிய கூட்டாளி முகமது அஸ்லாம் வானியை அமலாக்கத் துறையினர் நேற்று கைது செய்தனர்.
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் ஷபீர் ஷா மீது சட்டவிரோத பணப் பரிமாற்றம் மற்றும் தீவிரவாதத்துக்கு நிதி பெற்றது உட்பட பல வழக்குகள் உள்ளன. கடந்த மாதம் கைது செய்யப்பட்ட ஷா அமலாக்கத் துறையின் காவலில் இருக்கிறார். இவருடைய நெருங்கிய கூட்டாளியும் ஹவாலா தரகருமான முகமது அஸ்லாம் வானி மீதும் இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஷபீர் ஷாவுக்கு அஸ்லாம் வானி ரூ.2.25 கோடி கொடுத்ததாக புகார் எழுந்தது.
இந்த வழக்கில் ஆஜராகும்படி பல முறை சம்மன் அனுப்பியும் அவர் விசாரணைக்கு வரவில்லை. இதையடுத்து ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரன்ட்டை டெல்லி நீதிமன்றம் சமீபத்தில் பிறப்பித்தது. அதன் அடிப்படையில் காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் அமலாக்கத் துறையினர் நேற்று அஸ்லாம் வானியை கைது செய்தனர்.
மத்திய ஆசிய நாடுகளில் இருந்து தீவிரவாதத்துக்கு பணம் பெற்றதாக கடந்த 2005-ம் ஆண்டு ஆகஸ்ட் 26-ம் தேதி கைது செய்யப்பட்டார். அப்போது அவரிடம் இருந்து ரூ.63 லட்சம் மற்றும் பயங்கர வெடிப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் தீவிரவாதத்துக்கு பணம் பெற்ற குற்றச்சாட்டில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார். எனினும் ஆயுதத் தடை சட்டத்தின் கீழ் தண்டனை பெற்றார்.
இந்நிலையில் சட்டவிரோதப் பண பரிமாற்றம் தொடர்பான வழக்கில் நேற்று அஸ்லாம் வானியை அமலாக்கத் துறையினர் கைது செய்து டெல்லி அழைத்து வந்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அஸ்லாம் வானி காவலில் வைக்கப்பட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT