Published : 12 Aug 2017 10:15 AM
Last Updated : 12 Aug 2017 10:15 AM
இந்தியா - சீனா இடையே டோக்லாம் விவகாரத்தில் பதற்றம் நிலவும் நிலையில் பூடான் வெளியுறவு அமைச்சரை மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் சந்தித்து பேசினார்.
சிக்கிம் பகுதியில் பூடானை ஒட்டி உள்ள டோக்லாம் பகுதியை சீனா உரிமை கொண்டாடி வருகிறது. அந்த பகுதியில் சாலை அமைக்க சீனா முயற்சித்து வருகிறது. அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த இந்தியா, பூடான் நாடுகள், இப்போது இருக்கும் முத்தரப்பு ஒப்பந்தத்தை மீறி சீனா சாலை அமைக்க முயற்சிக்கிறது என்று கண்டனம் தெரிவித்தன. எல்லையில் சீன - இந்திய படைகள் குவிக்கப்பட்டுள்ளதால் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக பதற்றம் நிலவி வருகிறது. இந்திய படைகள் திரும்பிச் செல்ல வேண்டும் என்று சீனா தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருகிறது. ஆனால் இந்தியா அதை கண்டுகொள்ளவில்லை.
இந்நிலையில், நேபாள தலைநகர் காத்மாண்டில் ‘பிம்ஸ்டெக்’ நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் 15வது கூட்டம் நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்ட பூடான் நாட்டு வெளியுறவு அமைச்சர் டம்சோ டோர்ஜியை மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் சந்தித்துப் பேசினார். இலங்கை வெளியுறவு அமைச்சர் வசந்தா சேனநாயகேவையும் சுஷ்மா சந்தித்தார். இத்தகவலை வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
முன்னதாக கூட்டத்தில் பேசிய அமைச்சர் சுஷ்மா சுவராஜ், பாரம்பரியமான மற்றும் பாரம்பரியம் அல்லாத பாதுகாப்பு சவால்களை சமாளிக்க முழுமையான அணுகுமுறையை ‘பிம்ஸ்டெக்’ நாடுகள் மேற்கொள்ள வேண்டும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT