Published : 08 Aug 2017 09:18 AM
Last Updated : 08 Aug 2017 09:18 AM

ரக் ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு தெலங்கானா அமைச்சருக்கு ஹெல்மெட் பரிசளித்த தங்கை: ஆந்திராவில் பெண்களுக்கு தக்காளி பரிசளித்த காங். தலைவர்

ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு தெலங்கானா அமைச்சர் கே.டி.ராமாராவுக்கு அவரது தங்கையும், எம்.பி.யுமான கவிதா, ஹெல்மெட் பரிசளித்தார். இதேபோல ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ரகுவீரா ரெட்டி, தனக்கு ராக்கி கயிறு கட்டிய பெண்களுக்கு தக்காளி, வெங்காயம் ஆகியவற்றை பரிசளித்து, விலைவாசி உயர்வை கண்டித்தார்.

ரக்ஷா பந்தன் பண்டிகை நேற்று நாடு முழுவதிலும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஹைதராபாத்தில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் நரசிம்மனுக்கு பெண்கள் அமைப்பினர் ராக்கி கட்டி கொண்டாடினர். இதுபோல ஆந்திர தலைநகரான அமராவதியில் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு, பெண் அமைச்சர்கள் ராக்கி கயிறு கட்டினர்.

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு அவது தங்கை ஷர்மிளா மற்றும் கட்சி நிர்வாகிகள் ராக்கி கயிறு கட்டினர். இதேபோல ஹைதராபாத்தில் தெலங்கானா மாநில தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் கே.டி.ராமாராவுக்கு அவரது தங்கையும், நிஜாமாபாத் தொகுதி எம்பியுமான கவிதா, ஹெல்மெட் பரிசளித்து ராக்கி கயிறு கட்டினார். பதிலுக்கு நெசவாளர் தினம் என்பதால், கைத்தறி பட்டுப்புடவையை அமைச்சர் கே.டி. ராமாராவ் தங்கைக்கு பரிசளித்தார்.

இந்நிலையில் விஜயவாடாவில், ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ரகுவீராவுக்கு கட்சியை சேர்ந்த பெண்கள் ராக்கி கயிறு கட்டினர். அதற்கு பதிலாக ரகுவீரா ரெட்டி, பெண்களுக்கு தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளை வழங்கினார். விலைவாசி உயர்வுக்கு மத்திய அரசை கண்டித்து அவற்றை வழங்கியதாக ரகுவீரா தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x