Published : 02 Aug 2017 09:48 AM
Last Updated : 02 Aug 2017 09:48 AM

காவிரியில் கழிவு நீர் கலப்பதை கண்டறிய கூட்டுக்குழு அமைப்பு: வரும் 15-ம் தேதி முதல் ஆய்வு தொடக்கம்

கர்நாடக மாநிலம் குடகு மலையில் உருவாகும் காவிரி நதி 765 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து தமிழகத்தில் வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது. காவிரி பாயும் பகுதிகளில் உள்ள பல்வேறு வகையான தொழிற்சாலைகளின் கழிவுகள் நதியில் கலக்கப்படுகிறது. காவிரியில் கலக்கும் மொத்த கழிவுகளில் 15 முதல் 20 சதவீதம் மட்டுமே கர்நாடக அரசால் சுத்திகரிக்கப்படுகிறது. மீதமுள்ள மாசு கலந்த காவிரி நீரே தமிழகத்துக்கு வருகிறது.

இதனால் காவிரியில் உள்ள லட்சக்கணக்கான நீர்வாழ் உயிரினங்கள் இறக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த கழிவு நீரால் பாதிக்கப்படும் தமிழக விவசாயிகளுக்கு கர்நாடக அரசு இழப்பீடாக ரூ.2,400 கோடி வழங்க வேண்டும் என தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டது. இதையடுத்து உச்ச நீதிமன்றம் அண்மையில், “காவிரியில் கழிவு நீர் கலப்பதை கண்டறிந்து, தடுக்கப்பட வேண்டும்.

எனவே மத்திய அரசு இரு மாநிலங்களின் பங்களிப்புடன் கூட்டுக்குழுவை உருவாக்கி முறையாக ஆய்வு செய்து, நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து, நேற்று மத்திய நீர்வளத்துறை, “காவிரியில் கழிவு நீர் கலப்பது தொடர்பாகவும், கழிவு நீரின் தன்மை குறித்தும் ஆய்வு செய்ய மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைமை அதிகாரி பரத்வாஜ் தலைமையில் கூட்டுக்குழுவை அமைத்துள்ளது. இக்குழுவில் தமிழகம், கர்நாடகா ஆகிய மாநிலங்களை சேர்ந்த மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும், பொறியாளர்களும் இடம் பெற்றுள்ளனர். இந்த குழு வரும் 15-ம் தேதி முதல் காவிரி நதி பாயும் பகுதிகளில் நேரில் ஆய்வு செய்யும். இதன் முடிவுகள் தொடர்பாக வரும் செப்டம்பர் 10-ம் தேதி கூட்டு குழுவின் கூட்டம் டெல்லியில் நடைபெறும்” என அறிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x