Last Updated : 02 Aug, 2017 09:50 AM

 

Published : 02 Aug 2017 09:50 AM
Last Updated : 02 Aug 2017 09:50 AM

பெங்களூருவில் குஜராத் காங்கிரஸ் எம்எல்ஏக்களை வளைக்க பாஜகவினர் வருகை: காங்கிரஸ் மேலிடம் அதிர்ச்சி

பெங்களூரு அருகே சொகுசு விடுதியில் தங்கியுள்ள குஜராத் காங்கிரஸ் எம்எல்ஏக்களிடம் குதிரை பேரம் நடத்துவதற்காக அம்மாநிலத்தில் இருந்து பாஜக நிர்வாகிகள் பெங்களூரு வந்துள்ளனர். இதனால் காங்கிரஸ் மேலிடம் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது.

குஜராத்தில் வரும் 8-ம் தேதி நடைபெற உள்ள மாநிலங்களவை தேர்தலில் பாஜக சார்பில் அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, காங்கிரஸில் இருந்து விலகிய பல்வந்த் ராஜ்புத் ஆகியோர் போட்டியிடுகின்றனர். காங்கிரஸ் சார்பில் சோனியா காந்தியின் அரசியல் செயலர் அகமது படேல் போட்டியிடுகிறார்.

பாஜக வேட்பாளர்கள் மூவரையும் வெற்றி பெற வைக்கும் நோக்கில், காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு கோடிக்கணக்கில் குதிரைப் பேரம் பேசப்படுவதாக புகார் எழுந்தது. இதை உறுதிப்படுத்தும் வகையில் ஒரே நாளில் 6 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜக பக்கம் சாய்ந்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த காங்கிரஸ் மேலிடம், உடனடியாக 44 எம்எல்ஏக்களையும் காங்கிரஸ் ஆளும் மாநிலமான கர்நாடகாவுக்கு அனுப்ப முடிவெடுத்தது. கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவில் பெங்களூருவில் வந்திறங்கிய காங்கிரஸ் எம்எல்ஏக்கள், பிடதியில் உள்ள ஈகல்டன் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். கர்நாடக மின்சாரத்துறை அமைச்சர் டி.கே.சிவக்குமாரும், அவரது தம்பியும் எம்.பி.யுமான டி.கே.சுரேஷ்குமாரும் காங்கிரஸ் எம்எல்ஏக்களை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கட்சி மாறுவதையும், பதவி விலகுவதையும் தடுக்கும் வகையில் விடுதியை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

பெங்களூருவில் பாஜகவினர்

காங்கிரஸ் எம்எல்ஏக்களை தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து அமித் ஷாவின் உத்தரவின் பேரில் குஜராத் பாஜக நிர்வாகிகள் 20 பேர் நேற்று பெங்களூரு வந்தனர். பாஜக குழுவுக்கு தேவையான ஏற்பாடுகளை கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா செய்து கொடுத்துள்ளார். இந்தக் குழுவினர் பிடதியில் உள்ள காங்கிரஸ் எம்எல்ஏக்களை வளைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

முதல்கட்டமாக குஜராத்தில் உள்ள காங்கிரஸ் எம்எல்ஏக்களின் மனைவி, பிள்ளைகளை பெங்களூருவுக்கு வரவழைத்து, விடுதியில் தங்கியிருக்கும் எம்எல்ஏக்களின் மனதை மாற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். காங்கிரஸில் இருந்து பாஜகவுக்கு ரூ. 25 கோடி வரையில் பணமும், அரசில் முக்கிய பொறுப்பும் வழங்கப்படுவதாக உறுதி அளித்துள்ளனர். இதனால் காங்கிரஸ் எம்எல்ஏக்களிடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டுள்ளதால், டி.கே. சிவக்குமார் சமாதான முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

காங்கிரஸ் மேலிடத்தின் உத்தரவுபடி அதிருப்தி அடைந்த 14 எம்எல்ஏக்களை பிடதியில் இருந்து தேவனஹள்ளி அருகேயுள்ள கோல்டன் பாம் சொகுசு விடுதிக்கு இடமாற்றமும் செய்துள்ளனர். பாஜகவினர் தொடர்ந்து வலை வீசுவதால் எம்எல்ஏக்களை மடிகேரி, மைசூரு உள்ளிட்ட இடங்களுக்கு சுற்றுலா அழைத்து செல்லவும் காங்கிரஸ் மேலிடம் தயக்கம் காட்டி வருவதாக தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x