Last Updated : 26 Aug, 2017 12:51 PM

 

Published : 26 Aug 2017 12:51 PM
Last Updated : 26 Aug 2017 12:51 PM

பஞ்சாப், ஹரியாணா கலவர எதிரொலி: பால் கிடைக்காமல் சிம்லா மக்கள் தவிப்பு

பஞ்சாப், ஹரியாணாவில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு மற்றும் தடை உத்தரவுகளால், அருகிலுள்ள இமாச்சலப் பிரதேசத்தின் மலைப்பகுதியான சிம்லாவில் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவரான குர்மீத் ராம் ரஹீம் சிங் குற்றவாளி என்று நேற்று (வெள்ளிக்கிழமை) தீர்ப்பான நிலையில், பஞ்சாப் மற்றும் ஹரியாணா மாநிலங்களில் வன்முறை வெடித்தது.

இதைத் தொடர்ந்து அங்கே ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால் அங்கிருந்து சிம்லாவுக்கு அனுப்பப்படும் பால் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்துப் பேசிய சிம்லாவைச் சேர்ந்த பால் சப்ளையர், ''ஊரடங்கு உத்தரவால் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் பஞ்சாப்பில் இருந்து வரவில்லை. இதனால் சிம்லாவின் கடைகளுக்கும், உணவகங்களுக்கும் வணிக நிறுவனங்களுக்கும் பால் கிடைக்கவில்லை.

இங்கு தினசரி விநியோகிக்கப்படும் பிரெட் உள்ளிட்ட பொருட்கள் பெரும்பாலும் பஞ்சாப்பில் இருந்தே வரும். சிம்லாவின் ஒட்டுமொத்த பால் நுகர்வு சுமார் 50,000 லிட்டர்களாகும். இவற்றில் பெரும்பான்மையான பகுதி, பஞ்சாப் பால் கூட்டுறவு சங்கத்தில் இருந்தே பெறப்படுகிறது.

இச்சங்கம் பால் மட்டுமின்றி வெண்ணெய், நெய், சீஸ் மற்றும் தயிர் உள்ளிட்ட பொருட்களையும் சிம்லாவுக்கு விநியோகித்து வருகிறது'' என்றார்.

சுமார் 2 லட்சத்துக்குக்கும் மேற்பட்ட மக்கள் சிம்லாவில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், பஞ்சாப் கலவரத்தால் பால், பால் சார்ந்த பொருட்கள் வராததால் அம்மாநில மக்கள் தவிப்புக்குள்ளாகியிருக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x