Last Updated : 19 Aug, 2017 03:14 PM

 

Published : 19 Aug 2017 03:14 PM
Last Updated : 19 Aug 2017 03:14 PM

கோரக்பூர் ஒன்றும் சுற்றுலாத் தலம் இல்லை: ராகுலின் பயணத் திட்டம் குறித்து ஆதித்யநாத் தாக்கு

டெல்லியில் அமர்ந்திருக்கும் இளவரசர், கோரக்பூரைச் சுற்றுலாத் தலமாக்க அனுமதிக்கமாட்டோம் என்று கோரக்பூரைப் பார்வையிடத் திட்டமிட்டிருந்த காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியைச் சாடியுள்ளார் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்.

'ஸ்வச் உத்தரப் பிரதேசம்' என்னும் பிரச்சாரத்தைத் தொடங்கி வைத்துப் பேசிய யோகி ஆதித்யநாத், சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவையும் சாடினார்.

அப்போது அவர், ''முடிசூட்டிய இளவரசர் (அகிலேஷ் யாதவ்) லக்னோவில் அம்ர்ந்துள்ளார். டெல்லியில் அமர்ந்திருக்கும் யுவராஜாவுக்கு (ராகுல் காந்தி) தூய்மைப் பிரச்சாரத்தின் முக்கியத்துவம் புரியாது.

கோரக்பூர் மற்றும் கிழக்கு உ.பி. மக்களின் சுய மரியாதைக்கு யாராவது சவால் விடுத்தால், அவர்கள் கொடிய நோய்களுக்கு எதிராகப் போராடும் வகையில் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தட்டும்.

தங்களின் சுய லாபங்களுக்காக மாநில மக்களுக்கு வழங்க வேண்டிய அடிப்படைத் தேவைகளை முந்தைய அரசாங்கங்கள் மறுத்துள்ளன.

மூளைக் காய்ச்சலுக்கான மருத்துவத்தை விட, அதைப் பரவாமல் தடுப்பதே முக்கியம். அதற்காகத்தான் தூய்மையான குடிநீரையும், சுகாதாரத்தையும் வலியுறுத்துகிறோம். அதற்காகவே எங்கள் அரசு பணிபுரிகிறது'' என்றார்.

கோரக்பூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் குழந்தைகள் இறந்ததாகத் தகவல்கள் வெளியான நிலையில், பாதிக்கப்பட்ட இடத்தைப் பார்வையிட ராகுல் காந்தி உத்தரப் பிரதேசம் வரத் திட்டமிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x