Published : 12 Jul 2017 10:21 AM
Last Updated : 12 Jul 2017 10:21 AM

மதுக்கடை தடை விவகாரம்: மாநில நெடுஞ்சாலை மாற்றத்துக்கு எதிரான மனு தள்ளுபடி

சண்டிகரில் நெடுஞ்சாலைகள் மாவட்ட சாலைகளாக மாற்றப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.

நாடு முழுவதும் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் 500 மீட்டர் தொலைவுக்குள் மதுக்கடைகள் இருக்கக்கூடாது என்று கடந்த ஏப்ரலில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து பல்வேறு மாநில அரசுகள், மாநில நெடுஞ்சாலைகளை மாவட்ட சாலைகளாக அறிவித்தன.

அந்த வரிசையில் சண்டிகர் யூனியன் பிரதேச அரசு சில நெடுஞ்சாலைகளை மாவட்ட சாலைகளாக மாற்றியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ‘அரைவ் அண்ட் சேப் சொசைட்டி’ தொண்டு நிறுவனம் சார்பில் பஞ்சாப் - ஹரியாணா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதைத் தொடர்ந்து அந்த தொண்டு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி கேஹர் தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் கூறியபோது, நகரங்களில் உள்ள நெடுஞ்சாலைகளில் நெரிசல் அதிகமாக இருப்பதால் வாகனங்கள் வேகமாக செல்ல முடியாது. அந்தவகையில் நகரங்களில் நெடுஞ்சாலைகள் மாவட்ட சாலைகளாக மாற்றப்படுவதில் தவறு இல்லை என்று தெரிவித்தனர்.

இறுதியில் சண்டிகர் யூனியன் பிரதேச அரசுக்கு எதிரான மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x