Published : 08 Jul 2017 08:35 AM
Last Updated : 08 Jul 2017 08:35 AM
திருமணமான பெண்கள் அணியும் மாங்கல்யத்தில் சிவப்பு நிற பவளம் சேர்க்கப்பட்டிருந்தால், அவர்களது கணவர்களின் உயிருக்கு ஆபத்து நேரிடும் என்ற வதந்தி கர்நாடகாவில் காட்டுத் தீப் போல வேகமாக பரவி வருகிறது. இதனால் பெண்கள் பீதி அடைந்துள்ளனர்.
கர்நாடகா மாநிலம் பெல்லாரி, ரெய்ச்சூர், சித்ரதுர்கா உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இந்த வதந்தி வேகமாக பரவி வருகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த திருமணமான பெண்கள் தங்களின் மாங்கல்யத்தில் உள்ள சிவப்பு நிற பவள மணிகளை அகற்றி வருகின்றனர்.
எச்சரிக்கை
இந்த சிவப்பு பவள வதந்தி பிற மாவட்டங்களுக்கும் வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து கர்நாடக அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலவாரியம் இதனைத் தடுக்கும் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கர்நாடக அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலவாரிய அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘ஏழை எளிய பெண்களிடம் மூடநம்பிக்கையை பரப்புவது பெரிய குற்றமாகும். இதன்மூலம் ஆதாயம் அடைவதற்காக ஒரு கும்பல் திட்டமிட்டு இத்தகைய வதந்தியை பரப்பியுள்ளது. தாலியில் உள்ள சிவப்பு பவள மணியால் கணவரின் உயிருக்கு எப்படி ஆபத்து ஏற்படும்? எனவே பெண்கள் சிந்தித்து செயல்பட வேண்டும். பெண்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளைத் தொடங்க இருக் கிறோம்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT