Published : 27 Nov 2014 12:09 PM
Last Updated : 27 Nov 2014 12:09 PM
உத்தரப் பிரதேசத்தில் பதான் மாவட்டத்தில் பலியான இரு சகோதரிகளும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கான ஆதாரம் இல்லை என சிபிஐ தெரிவித்துள்ளது.
கடந்த மே 27-ம் தேதி, உத்தரப் பிரதேசம், பதான் மாவட்டத்தில் உள்ள கட்ரா சதாத்கஞ்ச் போலீஸ் சரகத்துக்கு உள்பட்ட கிராமத்தைச் சேர்ந்த 14, 15 வயதுடைய இரு தலித் சிறுமிகள் காணாமல் போயினர். அடுத்த நாள் உஷைத் பகுதியில் உள்ள மாமரத்தில் பிணமாக தொங்கிய நிலையில் மீட்கப்பட்டனர்.
பிரேதப் பரிசோதனை அறிக்கையில், இருவரும் கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு பின்பு, தூக்கில் தொங்கவிடப்பட்டுள்ளனர் எனக் கூறப்பட்டது.
தலித் சிறுமிகளின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணத் தொகை வழங்க உ.பி. அரசும் உத்தரவிட்டது. ஆனால், நிவாரணத் தொகையை நிராகரித்த சிறுமிகளின் குடும்பத்தினர், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரினர்.
இதனையடுத்து, பாலியல் பலாத்காரம் சம்பவத்தை விசாரிக்க சிபிஐ-க்கு உத்தரவிடுமாறு மத்திய அரசுக்கு முதல்வர் அகிலேஷ் யாதவ் பரிந்துரை செய்தார். கடந்த ஜூன் மாதம், இந்த சம்பவம் தொடர்பான விசாரணை சிபிஐ-க்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கில் உத்தரப் பிரதேசத்தில் பதான் மாவட்டத்தில் பலியான இரு சகோதரிகளும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கான ஆதாரம் இல்லை என சிபிஐ தெரிவித்துள்ளது. நாளை சிபிஐ பதான் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யவுள்ளது.
இது தொடர்பாக சிபிஐ மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், மருத்துவ கழகம் அளித்துள்ள அறிக்கையில் சகோதரிகள் இருவரும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டார்களா என்பதில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளதாகவும் டி.என்.ஏ. பரிசோதனையிலும் சகோதரிகள் அத்தகைய துன்புறுத்தலுக்கு ஆளாகியிருப்பதற்கான அடையாளம் இல்லை எனவும் தெரிவித்துள்ளதாகவும் கூறினார்.
விசாரணை அறிக்கை நீதிமன்றத்தில் நாளை தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் சிபிஐ அதிகாரி இவ்வாறு கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT