

குறைந்த கட்டணத்தில் குளிர் சாதன வசதி (ஏசி) கொண்ட ரயில் விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. மூன்றாம் வகுப்பு ஏசி கட்டணத்தைவிட, இந்த வகை ரயிலில் கட்டணம் குறைவாக இருக்கும்.
தற்போது நாடு முழுவதும் இயக்கப்படும் மெயில் மற்றும் அதிவிரைவு ரயில்களில் ஸ்லீப்பர், 3-ம் வகுப்பு ஏசி, இரண்டாம் வகுப்பு ஏசி மற்றும் முதல் வகுப்பு ஏசி என பல்வேறு பிரிவுகள் உள்ளன. அந்த பிரிவுகளுக்கு ஏற்றபடி பயணிகளிடம் இருந்து கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. ராஜ்தானி, சதாப்தி ரயில்களிலும், அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட ஹம்சபார் மற்றும் தேஜாஸ் ரயில்களில் மட்டுமே அனைத்து பெட்டிகளிலும் ஏசி வசதி உள்ளது.
இந்தச் சூழலில் ரயில் பயணி களை அதிகம் கவரும் வகையில் குறிப்பிட்ட வழித்தடங்களில் முற்றிலும் ஏசி வசதி செய்யப்பட்ட ரயில்களை அறிமுகம் செய்ய ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது. இந்த ரயிலில் 3-ம் வகுப்பு ஏசி, இரண்டாம் வகுப்பு ஏசி, முதல் வகுப்பு ஏசி பெட்டியுடன் 3 அடுக்கு கொண்ட ஏசி பெட்டி களும் இணைக்கப்பட்டிருக்கும். அத்துடன் தானியங்கி கதவுகளும் பொருத்தப்பட்டிருக்கும். மேலும் 3-ம் வகுப்பு ஏசி கட்டணத்தை விட, இந்த வகை ரயிலில் கட்டணம் குறைவாக இருக்கும். அதிக குளிரால் பயணிகள் அவதிபடுவதை தவிர்க்கும் வகையில் ஏசியின் வெப்ப நிலை 24 முதல் 25 டிகிரி செல்சியஸாக இருக்கும்படி வைக்கப்படவுள்ளது. இதனால் இந்த ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு போர்வை பயன் படுத்தும் அவசியம் இருக்காது என கூறப்படுகிறது.
அண்மையில் அறிமுகம் செய் யப்பட்ட ஹம்சபார் அதிவிரைவு ரயிலுக்கு பயணிகளிடையே அதிக வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.