

நடிகை பாவனா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மலையாள நடிகர் திலீப் ஜாமீன் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்ய உள்ளார்.
இந்தத் தகவலை அவரது வழக்கறிஞர் கே.ராம்குமார் நேற்று தெரிவித்தார். இந்த வழக்கில் திலீப் சிக்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அதேநேரம், திலீப்புக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவிக்க அரசுத் தரப்பு திட்டமிட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி 17-ம் தேதி காரில் சென்று கொண்டிருந்த நடிகை பாவனாவை ஒரு கும்பல் கடத்தி பாலியல் ரீதியாக துன்புறுத்தியது. இதுதொடர்பாக பல்சர் சுனில் உட்பட 6 பேரை போலீஸார் கைது செய்தனர்.
இந்த வழக்கில் நடிகர் திலீப் கடந்த 10-ம் தேதி கைது செய்யப்பட்டார். ஜாமீன் கோரி அங்கமாலி நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை தள்ளுபடி செய்த மாஜிஸ்திரேட், வரும் 25-ம் தேதி வரை அவரை காவலில் வைக்க உத்தரவிட்டார். அவர் இப்போது ஆலுவா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.