Published : 12 Jul 2017 10:14 AM
Last Updated : 12 Jul 2017 10:14 AM
உத்தரபிரதேச மாநிலம், அலகாபாத் திரிவேணி சங்கமத்தின் தென்கரை சாலைக்கு தமிழ் கேசந்த் திருவள்ளுவர் மார்க் (தமிழ் ஐயன் திருவள்ளுவர் சாலை) எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதன் கல்வெட்டு திறப்பு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது.
உ.பி.யில் மொழிகளை இணைக்கும் அமைப்பாக செயல்பட்டு வருவது ‘பாஷா சங்கம்’. அலகாபாத் திரிவேணி சங்கத்தின் தென்கரை சாலைக்கு திருவள்ளுவர் பெயர் வைத்து அவரது சிலையையும் அமைக்க வேண்டும் என இச்சங்கத்தினர் பல ஆண்டுகளாக கோரி வந்தனர். பாஷா சங்கத்தின் தலைவராக பொறுப்பேற்ற முதல் தமிழரான எம்.கோவிந்தராஜனும் இதற்காக முயன்று வந்தார். இது குறித்த செய்திகள் ‘தி இந்து’வில் தொடர்ந்து வெளியாகின.
இந்நிலையில் இக்கோரிக்கை ஏற்கப்பட்டு, திரிவேணி சங்கம தென்கரை சாலைக்கு திருவள்ளுவர் பெயருடன் அவரது சிலையும் அங்கு அமைக்க அலகாபாத் மாநகராட்சி அனுமதி அளித்தது. இதன் முதல்கட்டமாக தென்கரை சாலைக்கான புதிய பெயர்ப் பலகை கல்வெட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதில் இந்தி மற்றும் தமிழில் தெருவின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது.
இன்மா இன்டெர்நேஷனல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ரத்தினவேல் பெயர்ப் பலகையை திறந்து வைத்தார்.
பாஷா சங்க நிறுவனர் கே.சி.கவுட் மரணப்படுக்கையில் இருந்தபோதும் அலகாபத்தில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி வந்தார் என சங்கப் பொருளாளர் சி.எம்.பார்கவா நினைவுகூர்ந்தார். பின்னர் திருவள்ளுவர் பெயரில் கவியரங்கம் நடைபெற்றது.
வரும் நவம்பரில் இங்கு நிறுவப்பட உள்ள திருவள்ளுவர் சிலையை இன்மா இன்டெர்நேஷனல் நிறுவன நிர்வாக இயக்குநர் ரத்தினவேல் செய்து வருவதாக உறுதி அளித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT