Last Updated : 06 Jul, 2017 08:13 PM

 

Published : 06 Jul 2017 08:13 PM
Last Updated : 06 Jul 2017 08:13 PM

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் வரும் 11-ல் ஆலோசனை

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் குறித்து எதிர்க்கட்சிகள் வரும் 11-ம் தேதி ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளன.

தற்போதைய குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரியின் பதவிக் காலம் வரும் ஆகஸ்ட் 10-ம் தேதியுடன் முடிவடைகிறது. குடியரசு துணைத் தலைவருக்கான தேர்தல் தேதி ஆகஸ்ட் 5-ம் தேதி ஆகும். இதற்கான அறிவிக்கையை தேர்தல் ஆணையம் கடந்த 4-ம் தேதி முறைப்படி வெளியிட்டது.

இதன்படி வேட்பு மனு தாக்கல் கடந்த 4-ம் தேதி தொடங்கியது. வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் ஜூலை 18. மறுநாள் (ஜூலை 19) வேட்பு மனுக்கள் பரிசீலிக்கப்படுகின்றன. ஜூலை 21 வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கான கடைசி நாளாகும்.

எனினும் இந்த தேர்தலுக்கான வேட்பாளர்களை ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியோ, எதிர்க் கட்சியான ஐக்கிய முற்போக்கு கூட்டணியோ இதுவரை அறிவிக்கவில்லை. குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு பல்வேறு வேட்பாளர்கள் போட்டியிட்டால், ஆகஸ்ட் 5-ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு, அன்று மாலையே பதிவான வாக்குகள் எண்ணப்படும். குடியரசு துணைத் தலைவர் தேர்தலைப் பொறுத்தவரை அதில் போட்டியிடும் வேட்பாளரை நாடாளுமன்ற உறுப்பினர்களாக உள்ள 20 பேர் முன்மொழிய, அதை 20 பேர் வழிமொழிய வேண்டும்.

ஹரியாணாவில் கடந்த ஆண்டு நடந்த மாநிலங்களவை தேர்தலில் பேனா மை விவகாரத்தால் சர்ச்சை ஏற்பட்டதை அடுத்து, ஜூலை 17-ல் நடக்கவுள்ள குடியரசுத் தலைவர் தேர்தலின்போதும், ஆகஸ்ட் 5-ல் நடக்கும் குடியரசு துணைத் தலைவர் தேர்தலின்போதும் பிரத்யேக பேனாக்களை பயன்படுத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

அந்தப் பேனாவை கொண்டே வாக்காளர்கள் தங்களது வாக்குகளைப் பதிவு செய்ய வேண்டும். வேறு பேனா பயன்படுத்தினால் அந்த வாக்கு செல்லாத வாக்காக கருதப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், வேட்பாளரை தேர்வு செய்வது குறித்து காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் வரும் 11-ம் தேதி ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளன. மாநிலங்களவை செயலாளர் ஷும்ஷர் கே.ஷெரிப் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x