அவசர கதியில் ஜிஎஸ்டி அமல் செய்யப்படுகிறது: ராகுல் தாக்கு

அவசர கதியில் ஜிஎஸ்டி அமல் செய்யப்படுகிறது: ராகுல் தாக்கு
Updated on
1 min read

அவசர கதியில் ஜிஎஸ்டி வரிவிதிப்பு அமல் செய்யப்படுகிறது. இதன் அறிமுக நிகழ்ச்சியை மத்திய அரசு வேடிக்கை காட்சியாக்கி சுய விளம்பர நிகழ்ச்சியாக்குகிறது என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் ட்விட்டரில் இன்று வெளியிட்ட பதிவுகளில் கூறியிருப்பதாவது: ஜிஎஸ்டி வரி விதிப்பானது சீர்திருத்த நடவடிக்கையாகும். அதனால்தான் தொடக்கத்திலிருந்தே காங்கிரஸ் இதற்கு ஆதரவு தந்து வருகிறது.

ஆனால் ஜிஎஸ்டி வரிவிதிப்பு அமல் செய்யப்படுவது வேடிக்கை காட்சியாக்கப்பட்டுள்ளது. அவசரகதியில் இது அமல்படுத்தப்படுகிறது.

திட்டமிடல் இல்லாமலும், எதிர்கால பார்வை இன்றியும் அமல் செய்வதற்கான சரியான அமைப்புகளைத் தயார்படுத்திக் கொள்ளாமலும் வேகவேகமாக ஜிஎஸ்டியை கொண்டு வருவது சரியானதாக தெரியவில்லை. பணமதிப்பு நீக்க நடவடிக்கை போலவே இதுவும் அமைந்துள்ளது.

இந்த வரி சீர்திருத்த நடவடிக்கை நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கும் மேம்பாட்டுக்கும் உறுதுணை புரியும் சக்திமிக்கது. ஆனால் அரைவேக்காட்டுத்தனமாகவும் சுய விளம்பர நிகழ்ச்சியாகவும் அவசரகதியில் ஜிஎஸ்டி அமல்படுத்தப்படுகிறது. திறமையில்லாத அரசு மூலம் இந்த புதிய வரிவிதிப்பு நடைமுறை அமல் செய்யப்படுவது கவலையளிக்கிறது.

கோடிக்கணக்கான சாதாரண மக்கள், சிறு வணிகர்கள், வர்த்தகர்களுக்கு சிரமம், பதற்றம் ஏற்படுத்தாத வகையில் ஜிஎஸ்டி அமல் செய்யப்பட வேண்டும்'' என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in