குடியரசுத் தலைவர் பதவி அரசியலுக்கு அப்பாற்பட்டது: ராம்நாத் கோவிந்த்

குடியரசுத் தலைவர் பதவி அரசியலுக்கு அப்பாற்பட்டது: ராம்நாத் கோவிந்த்
Updated on
1 min read

குடியரசுத் தலைவர் பதவி அரசியலுக்கு அப்பாற்பட்டது என்று பாஜக கூட்டணி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.

வரும் 17-ம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பாஜக சார்பில் போட்டியிடும் ராம்நாத் கோவிந்த், நாடு முழுவதும் பயணம் மேற்கொண்டு ஆதரவு திரட்டி வருகிறார். அந்த வகையில், அருணாச்சல பிரதேச மாநிலத்துக்கு இன்று சென்றார்.

இடாநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அம்மாநில எம்எல்ஏக்கள் மத்தியில் ராம்நாத் கோவிந்த் பேசியதாவது:

''இந்தியா வளர்ந்த நாடாவதுடன் அதன் பலன் அனைத்துப் பிரிவு மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதுதான் எனது கனவு. அருணாச்சல பிரதேசம் சிறிய மாநிலமாக இருந்தாலும் என்னைப் பொறுத்தவரை உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பிற மாநிலங்களைப் போல முக்கியத்துவம் வாய்ந்ததுதான்.

முந்தைய ஆட்சியின்போது வடகிழக்கு மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டன. ஆனால் மத்தியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு இந்த நிலை மாறி உள்ளது.

குடியரசுத் தலைவர் என்பவர் எந்தக் கட்சியையும் சாராதவர். நாட்டில் பல்வேறு சாதி, இன, மத, மாநில வேறுபாடுகள் இருந்தாலும் அனைவரும் சமம்'' என்று ராம்நாத் கோவிந்த் தெரிவித்தார்.

ராம்நாத் கோவிந்துடன் மத்திய அமைச்சர்கள் நரேந்திர சிங் தோமர் மற்றும் கிரண் ரிஜிஜு, பாஜக தேசிய பொதுச் செயலாளர் ராம் மாதவ், மக்களவை எம்.பி.ராம் விச்சார் நிட்டம் மற்றும் வடகிழக்கு ஜனநாயக கூட்டணி ஒருங்கிணைப்பாளர் ஹிமந்த பிஸ்வ சர்மா உள்ளிட்டோர் சென்றிருந்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in