Published : 29 Jul 2017 09:37 AM
Last Updated : 29 Jul 2017 09:37 AM
மறைந்த கர்நாடக முன்னாள் முதல்வர் தரம் சிங் உடல் குல்பர்காவில் உள்ள அவரது சொந்த கிராமத்தில் நேற்று தகனம் செய்யப்பட்டது.
காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான தரம் சிங் (80) கர்நாடக மாநிலம் குல்பர்காவை சேர்ந்தவர். கடந்த 2004-ம் ஆண்டில் முதல்வராக பொறுப்பேற்ற தரம்சிங் 20 மாதங்கள் பதவி வகித்தார். முதுமை காரணமாக அரசியலில் இருந்து விலகியிருந்த அவர் பெங்களூருவில் நேற்று முன்தினம் மாரடைப்பால் காலமானார்.
மறைந்த தரம் சிங்கின் உடலுக்கு பெங்களூருவில் அரசியல் தலைவர்களும், மக்களும் அஞ்சலி செலுத்திய பிறகு, நேற்று பீதருக்கு கொண்டு செல்லப்பட்டது. பீதர் விமான நிலைய மைதானத்தில் வைக்கப்பட்ட தரம் சிங்கின் உடலுக்கு காங்கிரஸ் தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர்.
இதையடுத்து தரம் சிங்கின் சொந்த ஊரான நெலோகி கிராமத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, மாலையில் இறுதி சடங்குகள் நடைபெற்றன. இதில் முதல்வர் சித்தராமையா, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, குலாம் நபி ஆசாத், திக் விஜய் சிங், கர்நாடக அமைச்சர்கள் பிரியங் கார்கே உள்ளிட்ட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் தரம் சிங்கின் உடல் அரசு மரியாதைப்படி சொந்த தோட்டத்தில் தகனம் செய்யப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT