Last Updated : 30 Jul, 2017 11:36 AM

 

Published : 30 Jul 2017 11:36 AM
Last Updated : 30 Jul 2017 11:36 AM

நம் தேசம் மாறிவிட்டது!

தேசத்துக்காக நான் செய்ய வேண்டியது எதுவுமில்லை’ என்ற சிந்தனையின் தடையற்ற செயலாகத்தான் பிஹாரில் நிதிஷ் தலைமையில் நடந்துள்ள அணி மாற்றத்தைப் பார்க்க வேண்டும்; குறுகிய கால லாபத்துக்காக மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு இதைவிடச் சிறந்த உதாரணம் வேறு இருக்க முடியாது.

தங்களுடைய (மதச்சார்பற்ற) சித்தாந்தத்துக்கு நேரெதிரான குழுவுடன் நிதிஷ் சேர்ந்திருப்பது, 2019 மக்களவை பொதுத் தேர்தல் முடிவை நரேந்திர மோடி அமித் ஷா இறுதி செய்து விட்டனர் என்பதையே உணர்த்துகிறது.

இந்திய அரசியலிலும் சமூகத்திலும் ஏற் பட்டுள்ள மாற்றத்தை இது காட்டுகிறது; இந்திரா காந்தியைவிட சக்திவாய்ந்தவரும் வெற்றிகர மானவருமான ஓர் அரசியல் ஜாம்பவானின் எழுச்சியையும் காட்டுகிறது. இந்திரா காந்தி அதிக மாநிலங்களில் ஆட்சி செய்தார், மூன்று பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றார் என்று உடனே ஆரம்பிக்க வேண்டாம்; ஏற்கெனவே நாடு முழுக் கப் பரவியும் வெற்றி பெற்று ஆட்சியும் நடத்திவந்த கட்சியை இந்திரா சுவீகரித்துக் கொண்டார், கட்சிக்குள் எந்தவித எதிர்ப்பும் இல்லாமல். மோடி முதலில் கட்சிக்குள்ளேயே தன்னை எதிர்த்தவர்களை வெல்ல வேண்டியிருந்தது. சித்தாந்தரீதியாக எதிரானவர்களும் மிகப் பெரிய வாக்கு வங்கிக்குச் சொந்தக்காரர்களாகவும் இருந்த பல எதிர்க்கட்சித் தலைவர்களை வெல்ல வேண்டியிருந்தது.

மோடியும் அமித் ஷாவும், இந்திரா காந்தி காங்கிரஸைத் தன்னுடைய கட்டுக்குள் வைத் திருந்ததைவிட அதிகக் கட்டுப்பாட்டில் வைத்துள் ளனர். 1952-க்குப் பிறகு எதிர்க்கட்சிகள் மிகவும் வலுவிழந்த நிலையில் உள்ளன. (1984-89-ல் ராஜீவ் ஆட்சி செய்த காலத்தை ஒப்பிட முடியாது.) இப்போது ஊடகங்கள் மிகவும் மகிழ்ச்சியோடு ஆட்சியாளர்கள் எதிரில் மண்டியிட்டு அமர்ந்துள் ளன. பணமதிப்பு நீக்கம் அறிவித்து 9 மாதங் களுக்குப் பிறகும், திரும்ப ஒப்படைத்த பழைய நோட்டுகளை ரிசர்வ் வங்கி இன்னும் எப்படி எண்ணி முடிக்காமல் இருப்பது பற்றி எந்த ஊடகமும் கேள்வி கேட்கவில்லை.

யமுனைக் கரையில் இயற்கை உபாதைகளைப் போக்கிக் கொள்கிறவர்களுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கிறது. மத்திய அரசு கொண்டுவந்த ‘தேசிய நீதித்துறை நியமன ஆணையம்’ என்ற சட்டம் செல்லாது என்று அறிவித்தபோது மட்டும் அரசியல் சட்டம் தனக்கு அளித்திருந்த போர்க்குணத்தைக் காட்டியது.

இன்றைய இந்தியாவின் நிலையை உணர்த்தி சில விஷயங்கள் இப்படிப் பட்டியலிடப்படுகின் றன. கடந்த 3 ஆண்டுகளில் புதிய அரசியல் இயக்கமும் அதற்கேற்ற மக்களின் மனோபாவ மும் களத்தில் தென்படுகின்றன. பழைய சிந்தனைகளும், நெறிகளும் இறந்துவிட்டன. தார்மிகம், அறநெறி என்பவை விடைபெற்று விட்டன. மதச்சார்பின்மை சிறந்த பண்பு என்று இப்போதுள்ள வாக்காளர்களில் பெரும்பான்மை யினரிடம் சொல்ல முடியாது; காரணம் மதச்சார் பின்மை என்று பேசுவோரில் பெரும்பாலான வர்கள் ஊழல் பேர்வழிகள் அல்லது வாரிசு அரசியலில் திளைப்பவர்கள். இடதுசாரிகள் வலியுறுத்தும் ‘மதமற்ற மதச்சார்பின்மை’ என்ற கொள்கைக்கும் ஆதரவு இல்லை

நாட்டை ஒற்றுமையாக வைத்திருக்கும் கட்சியினரின் தேசியவாதத்தையும் பெரிதாகப் பேசிவிட முடியாது; காரணம் அந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களே மும்பையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்கள் குறித்தும், உச்ச நீதிமன்றத்தால் உறுதிப்படுத்தப்பட்டுவிட்ட பயங்கரவாதிகளின் மரண தண்டனை குறித்தும், டெல்லியில் பட்லா ஹவுசில் நடந்தது துப்பாக்கிச் சண்டையா, போலி மோதலா என்றும் பெரும்பாலான மக்களின் நம்பிக்கைக்கு எதிராகக் கேள்விகளை எழுப்புகின்றனர்.

‘மகா கட்பந்தன்’ கூட்டணித் தலைவர்களுக்கு ஒரு கேள்வி; சொந்த வாரிசுகளுக்கு முடிசூட்டத் துடிக்கும் அரசியல் தலைவர்களைத் தவிர உங் கள் கூட்டணியில் யாராவது ஒரு முஸ்லிம் அல்லது பட்டியல் இனத் தலைவர் அல்லது பழங்குடிகள் தலைவரை வளர விட்டிருக்கிறீர்களா?

இந்திய சமூகச் சூழலில் ஏற்பட்டுள்ள ஒருவகை மனமாற்றம் என்னவென்றால், ஒரு காலத்தில் எவையெல்லாம் தார்மிகமாகச் சரி யென்று கருதப்பட்டனவோ அவை பற்றிய கண்ணோட்டம் அடுத்த இரண்டு தலைமுறை களில் மறுவரையறை செய்யப்பட்டிருக்கிறது. இன்றைய மூல மந்திரமோ ‘அதிகாரம்’... மோடியின் அரசியல் தகுதிச் சான்றுகளைப் பரிசீலித்தால், இப்போதுள்ள பிற அரசியல் போட்டியாளர்களை அவர் எப்போதோ விஞ்சி விட்டார் என்பது புலனாகும். 2002 குஜராத் மதக் கலவரத்துக்குப் பிறகு வாஜ்பாயிடமிருந்து எவ்வளவோ நெருக்குதல்கள் வந்தபோதும் பதவியை விட்டு விலகுவதாகவும் சொல்ல வில்லை, யாரையும் விலகுமாறும் கூறவு மில்லை. லலித் மோடி, வியாபம் ஊழல்கள் பற்றிய பேச்சுகளையெல்லாம் காதிலேயே போட்டுக்கொள்ளாமல் ஒதுக்கிவிட்டார். ஸ்மிருதி இரானி முக்கியத்துவம் குறைந்த துறைக்கு மாற்றப்பட்டாலும் பின்னாளில் நல்ல துறைக்கு மாற்றப்பட்டு மறுவாழ்வு அளிக்கப்படுகிறது. தன்னுடைய அரசுக்குத் தங்களுடைய பேச்சாலும் செயலாலும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியவர்களில் ஒருவரைக்கூட அவர் பதவியிலிருந்து நீக்கவில்லை, மத்திய திரைப்படத் தணிக்கைச் சான்றிதழ் அமைப்பின் தலைவர் பஹ்லஜ் நிகலானி உள்பட!

புதிய இந்திய வாக்காளர் சித்தாந்தங்களைக் கடந்தவர், உனக்கு நான் விளக்கம் தர வேண்டியதில்லை என்ற சிந்தனை உள்ளவர். பழைய தலைமுறைக்கு தார்மிகம், அரசியல் நேர்மை, கபடத்தனம் போன்றவை உண்டு என்பதால் அதைப்பற்றி வெளிப்படையாகப் பேசாமல் விடுகின்றனர். இந்தப் பழைய பாரங்களை மோடி-ஷா கூட்டணி விலக்கிவிட்டது. இந்தியர்கள் இதை விரும்புகின்றனர்.

இதை எதிர்கொள்வதற்கு எந்த எதிர்க்கட்சியும் தயாரில்லை. காங்கிரஸ் சுருங்கிவிட்டது, கர்நாடகத்தையும் இழந்துவிட்டால் காங்கிரஸ் முடங்கிவிடும். பஞ்சாபில் அமரீந்தர் சிங்குக்கும் நிதிஷ்குமாருக்கு ஏற்பட்ட நிலை உருவாகும்.

நியாயமோ, இல்லையோ நிதிஷ்குமாரை கட்சி மாறி என்று அழைப்பது பொருத்தமல்ல; பாஜகவுக்கு எதிராக இறுதிவரை மோதல் என்று இறங்குவது வீண்வேலை என்பதை உணர்ந்தவர் அவர். அவரது சமத்துவம், மதச்சார்பின்மை கோஷங்களுக்கு வரவேற்பு இல்லை. இப்போதோ அல்லது சிறிது காலம் கழித்தோ எல்லா எதிர்க் கட்சித் தலைவர்களும் இந்த நிலைமையை எதிர் கொள்வார்கள். நல்ல கற்பனை வளம் இருக்கிறதென்றால் இதிலிருந்து லாபகரமாக மீள புதிய சந்தைப்படுத்தும் வழியைக் கண்டுபிடிக்கலாம்.

- சேகர் குப்தா, மூத்த பத்திரிகையாளர், இந்தியன் எக்ஸ்பிரஸ் முன்னாள் முதன்மை ஆசிரியர், இந்தியா டுடே முன்னாள் துணை தலைவர்.

தொடர்புக்கு: shekhargupta653@gmail.com

தமிழில் சுருக்கமாக: ஜூரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x