Last Updated : 26 Jul, 2017 07:46 PM

 

Published : 26 Jul 2017 07:46 PM
Last Updated : 26 Jul 2017 07:46 PM

பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் திடீர் ராஜினாமா

பிஹார் முதல் அமைச்சர் நிதிஷ்குமார் இன்று மாலை தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார். தற்போதைய சூழலில் தம்மால் மக்களுக்கு பணி செய்ய முடியவில்லை எனக் காரணம் கூறி உள்ளார்.

லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது கடந்த ஜூலை 5-ல் சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இதில், பிஹாரின் துணை முதல் அமைச்சரும் லாலுவின் மகனுமான தேஜஸ்வீ பிரசாத் யாதவ் மீது வழக்கு பதிவாகி இருந்தது. இதனால், அவர் தன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என நிதிஷிடம் இருந்து அழுத்தம் கிளம்பியது.

இதற்கு லாலு தன் மகன் மீதான வழக்கு அரசியல் நோக்கம் கொண்டது என்பதால் தேஜஸ்வீ ராஜினாமா செய்ய மாட்டார் எனக் கூறி மறுத்து வந்தார். இதனால் நிதிஷ் மற்றும் லாலுவுக்கும் இடையே சமாதானம் மேற்கொண்ட காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியின் முயற்சி தோல்வியில் முடிந்தது.

இந்நிலையில், நிதிஷ் தனது பிஹார் முதல்வர் பதவியை திடீர் என ராஜினாமா செய்துள்ளார். இதற்கான ராஜினாமா கடிதத்தை இன்று மாலை பிஹார் ராஜ்பவனுக்கு நேரில் சென்று பொறுப்பு ஆளுநரான கேசரிநாத் திரிபாதியை சந்தித்தார். அவரிடம் தனது ராஜினாமா கடிதத்தை ஒப்படைத்துள்ளார்.

இதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நிதிஷ் கூறியதாவது: நான் எவரையும் ராஜினாமா செய்யக் கூறி கேட்கவில்லை. ஆனால், தம் மீதான புகார்கள் மீது பொதுமக்கள் முன் வெளிப்படையாக விளக்கம் அளிக்கும்படி லாலுஜி மற்றும் தேஜஸ்வீயிடம் கேட்டுக் கொண்டேன். தற்போது பணியாற்றுவதற்கு முடியாத சூழல் உருவாகி விட்டது. இதனால், எனது உணர்வு முதல் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யும்படி கூறியது.’ எனத் தெரிவித்துள்ளார்.

தன் ராஜினாமாவிற்கு முன்பாக நிதிஷ் தனது ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து

ஆலோசனை நடத்தி இருந்தார். இவர், ராஷ்ட்ரிய ஜனதா மற்றும் காங்கிரஸுடன் இணைந்து உருவாக்கிய மெகா கூட்டணியின் முதல் அமைச்சராகப் பொறுப்பேற்று இருந்தார். இனி, பிஹாரில் புதிய ஆட்சி அமையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்காக பிஹாரின் எதிர்கட்சியான பாரதிய ஜனதா தன் டெல்லி தலைமையகத்தில் தீவிர ஆலோசனை துவங்கி விட்டனர்.

பாஜகவின் தேசிய தலைவர் அமித்ஷா தலைமையிலான இந்த கூட்டத்தில் பாஜகவின் மூதத தலைவர்கள் இடம் பெற்றுள்ளனர். லாலுவுடனான கூட்டணியை முறித்தால் நிதிஷ் அரசிற்கு வெளியில் இருந்து ஆதரவளிக்க முன்வருவதாக பாஜக வட்டாரம் கடந்த வாரம் தெரிவித்திருந்தது. இது குறித்து பாஜக சார்பில் நிதிஷுக்கும் தூது அனுப்பப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x